Last Updated : 12 Jun, 2021 07:00 AM

 

Published : 12 Jun 2021 07:00 AM
Last Updated : 12 Jun 2021 07:00 AM

விளையாட்டாய் சில கதைகள்: பணயக் கைதிகளை மீட்ட முகமது அலி

முகமது அலியை ஒரு குத்துச்சண்டை வீரராகத்தான் பலருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒருமுறை, நல்லெண்ண தூதராகச் சென்று ஈராக்கில் பிடித்து வைக்கப்பட்டிருந்த 15 அமெரிக்க பணயக் கைதிகளை மீட்டார் என்பது பலருக்கும் தெரியாது.

1990-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கும், ஈராக் நாட்டுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தில் இருந்தது. ஈராக் மீது அமெரிக்கப் படைகள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் இருந்த நிலையில், ஈராக்கில் இருந்த 15 அமெரிக்கர்களை பணயக் கைதிகளாக பிடித்துவைக்க அந்நாட்டு அதிபர் சதாம் உசேன் உத்தரவிட்டார்.

இந்தச் சூழலில் முன்னாள் குத்துச்சண்டை வீரரான முகமது அலியை ஈராக் நாட்டுக்கு அனுப்பி, அவர்களை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசு முடிவெடுத்தது. முகமது அலி, பார்க்கின்சஸ் நோயால் பாதிக்கப்பட்டு, சரியாக நடக்கக்கூட முடியாமல் இருந்த காலகட்டம் அது. இந்த நேரத்தில் அவரை ஈராக்குக்கு அனுப்பினால் சரிப்பட்டு வருமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அமெரிக்க அரசு, முகமது அலியை ஈராக்குக்கு அனுப்பி வைத்தது.

ஈராக் நாட்டுக்கு வந்த முகமது அலி, 1990-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி ஈராக் அதிபர் சதாம் உசேனைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது பணயக் கைதிகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு சதாம் உசேனிடம் அவர் கோரிக்கை வைத்தார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சதாம் உசேன், “நான் முகமது அலியை தனியாக அமெரிக்காவுக்கு அனுப்பப் போவதில்லை. பணயக் கைதிகளையும் அவருடன் அனுப்பப் போகிறேன்” என்று அறிவித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு டிசம்பர் 2-ம் தேதி பணயக் கைதிகளுடன் முகமது அலி அமெரிக்கா திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x