Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவின் மிகப் பெரிய நம்பிக்கையாக இருக்கிறார் வினேஷ் பொகட்.
2016-ம் ஆண்டில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியிலேயே வினேஷ் பொகட் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் கால் இறுதிச் சுற்றுவரை வெற்றிகரமாக முன்னேறினார். இந்தச் சூழலில்தான் விதி விளையாடியது. சீன வீராங்கனை சுன் யனானுடன் மோதிக்கொண்டு இருந்தபோது, முட்டியில் காயம் ஏற்பட்டு போட்டியில் இருந்து வெளியேறினார் வினேஷ் பொகட்.
அதன்பிறகு வலிமையாக மீண்டு வந்த வினேஷ் பொகட், 2018-ம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். ஆரம்பத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு வந்த வினேஷ் பொகட், பின்னர் 53 கிலோ எடைப்பிரிவுக்கு மாறினார். 2019-ம்ஆண்டில் நுர் சுல்தான் நகரில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதுடன், ஒலிம்பிக்கில்பங்கேற்க தகுதி பெற்றார்.
ரியோ ஒலிம்பிக்கில் விட்ட பதக்கத்தை டோக்கியோவில் வென்றாக வேண்டும் என்ற லட்சியத்துடன் ஹங்கேரி பயிற்சியாளர் வோலர் அகோஸிடம் பயிற்சி பெற்ற வினேஷ், தொடர்ந்து பல வெற்றிகளைக் குவித்து வருகிறார். மல்யுத்தத்தில் 53 கிலோ எடைப்பிரிவில் தற்போது உலகின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள வினேஷ் பொகட், பல்வேறு சர்வதேச போட்டிகளில் வென்று இந்தியாவின் நம்பிக்கையை அதிகப்படுத்தி வருகிறார்.
இந்த ஒலிம்பிக் போட்டியில், ஜப்பானின் மாயு முகைடா, சீனாவின் பாங் கியான்யு, போலந்தின் ரொக்ஸானா சாசினா ஆகியோர் வினேஷ் பொகட்டுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சவால்களைக் கடந்து வினேஷ் பொகட் ஒலிம்பிக்கில் வெற்றிக் கொடியை பறக்கவிடுவார் என்று நம்புவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT