Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமீபத்தில் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது விராட் கோலியின் உணவுப் பழக்கம் பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்துள்ள விராட் கோலி, “நான் தினசரி என் உணவில் நிறைய காய்கறிகள், நிறைய கீரை, சில முட்டைகள் சாப்பிடுகிறேன். நாளொன்றுக்கு 2 முறை மட்டும் காபி குடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், இன்ஸ்டாகிராம் மூலம் கோலியிடம் எடுத்த பேட்டியில் கோலியின் உணவுப் பழக்கம் பற்றி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி, “ஒரு காலத்தில் நான் அசைவத்தை விரும்பி சாப்பிடுவேன். ஆனால், இப்போது சைவ உணவுக்கு மாறிவிட்டேன். 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தின்போது என் கழுத்து எலும்புகளில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. இதன் பக்கவிளைவாக கை சுண்டுவிரலில் மரப்புத்தன்மை ஏற்பட்டு பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. இதுதொடர்பாக மருத்துவர்களை அணுகியபோது, அவர்கள் எனக்கு சிகிச்சை அளித்ததுடன், அசைவ உணவு சாப்பிடுவதை விட்டுவிட்டால் இதுபோன்ற பிரச்சினைகள் மேற்கொண்டு வராமல் தடுக்கலாம் என்றனர். அதனால் நான் அசைவ உணவுகள் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, அப்படி சொன்ன விராட் கோலி, இப்போது முட்டைகள் சாப்பிடுவதாக சொல்லியிருப்பது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் சமூக வலைதளம் ஒன்றில் பதிவிட்ட விராட் கோலி, “நான் அசைவத்தை முற்றிலுமாக விடவில்லை. அதே நேரம், சைவ உணவை மட்டுமே விரும்பி சாப்பிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT