Published : 01 Jun 2021 04:34 PM
Last Updated : 01 Jun 2021 04:34 PM

பலவீனமான அணி என்பது அந்த காலம்; நியூஸிலாந்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்: இந்திய அணிக்கு அஜிக் அகர்கர் அறிவுரை

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன், இந்திய அணி கேப்டன் விராட் கோலி | படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி


நியூஸிலாந்து என்றாலே பலவீனமான அணி என்று நினைத்துக்கொண்டிருந்தது அந்தக் காலம். உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் போட்டியி்ல நியூஸிலாந்து அணியை இந்திய அணியினர் குறைத்து மதிப்பிடமாட்டார்கள் என நம்புகிறேன் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் வரும் 18ம் தேதி சவுத்தாம்டன் நகரில் நடைபெற உள்ளது. இரு அணிகளுமே வலிமையான அணி என்பதால் யார் சாம்பியன் பட்டம் வெல்லப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இதில் விராட் கோலி கேப்டன்ஷிப்பில் இதுவரை ஐசிசி சார்பில் எந்த கோப்பையையும் இந்திய அணி வென்றதில்லை என்பதால் இதை வெல்ல கடுமையாகப் போராடுவார், அதேபோல, நியூஸிலாந்து அணியும் வில்லியம்ஸன் தலைமையில் மிகப்பெரிய சவால் அளிக்கும் அணியாக இருக்கும்.

2020ம் ஆண்டு ஜனவரி மாதம் நியூஸிலாந்துக்கு பயணம் செய்த இந்திய அணி இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. நியூஸிலாந்தில் இருந்த அதே காலநிலைதான் சவுத்தாம்டனில் நிலவும் என்பதால், இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்.

இந்நிலையில் நியூஸிலாந்து அணியை எந்தவிதத்திலும் விராட் கோலி தலைைமயிலான இந்திய அணி குறைத்து மதிப்பிடமாட்டார்கள் என்று நம்புவதாகத் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கேன் வில்லியம்ஸன் தலைமையிலான நியூஸிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு சிறிதளவு மட்டுமே வாய்ப்புள்ள அணி என்று இந்திய அணி குறைத்து மதிப்பிடமாட்டார்கள். அவ்வாறு நினைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை அணுகினால், இந்திய அணி காலத்துக்கும் தங்களை குற்றமுள்ளவர்களாக நினைத்துக்கொள்ளக் கூடாது.

நியூஸிலாந்து அணி பலவீனமான அணி என்ற பட்டம் அவர்களை விட்டுச் சென்று நீண்டகாலமாகிவிட்டது. எந்த ஒரு ஐசிசி போட்டித் தொடராக இருக்கட்டும், அது டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஷ் டிராபி, உலகக் கோப்பை எதுவாக இருந்தாலும் நியூஸிலாந்து அணி தங்களை அனைவரும் திரும்பப் பார்க்கும் வகையில் செயல்படுகிறார்கள்.

இறுதிப்போட்டிக்கு செல்லாவிட்டாலும்கூட, காலிறுதிச் சுற்று, அரையிறுதி என முன்னேறுகிறார்கள். அவர்களின் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்தும் அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதற்கு சான்றாக இருக்கிறது. ஆதலால், நியூஸிலாந்து அணியைப் பற்றி குறைத்து மதிப்பிட்டிருந்தால் அதை இந்திய அணி நீக்கிவிட வேண்டும்.

நிச்சயமாக நியூஸிலாந்து அணியை குறைத்து மதிப்பிட்டு இந்திய அணி தவறு செய்யமாட்டார்கள் என நம்புகிறேன். இந்திய அணி நியூஸிலாந்து பயணம் செய்தபோது பலமுறை டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளார்கள். நியூஸிலாந்தில் உள்ள காலநிலை போன்றுதான் சவுத்தாம்டனிலும் நிலவும். ஆதலால், நியூஸிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடினால்தான் வெற்றிபெற முடியும்.

இவ்வாறு அகர்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x