Last Updated : 24 May, 2021 12:46 PM

 

Published : 24 May 2021 12:46 PM
Last Updated : 24 May 2021 12:46 PM

இந்திய அணியின் நிலைமை கஷ்டம்தான்: சவுத்தாம்டன் ஆடுகளம் குறித்து மான்டி பனேசர் கணிப்பு

இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் | படம் உதவி: ட்விட்டர்.

புதுடெல்லி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் நடக்கும் சவுத்தாம்டன் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்துவிட்டால் இந்திய அணியின் நிலைமை கஷ்டம், போராட வேண்டியது இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மான்டி பனேசர் கணித்துள்ளார்.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18ஆம் தேதி சவுத்தாம்டனில் உள்ள ஏஜெஸ் பவுல் மைதானத்தில் நடக்கிறது.

இரு அணிகளுமே இறுதிப் போட்டிக்குத் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. அதிலும் நியூஸிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடித் தங்களைத் தீவிரமாகத் தயார் செய்ய உள்ளது. ஆனால், இந்திய அணி எந்தவிதமான பயிற்சியும் இன்றி அடுத்த மாதம் இங்கிலாந்து செல்கிறது.

பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி, இசாந்த் சர்மா, சிராஜ் ஆகிய கூட்டணியைத்தான் வேகப்பந்துவீச்சுக்கு முழுவதுமாக நம்பியுள்ளனர். நியூஸிலாந்து அணியில் போல்ட், ஜேமிஸன், சவுதி, பெர்குஷன் எனப் பெரிய பட்டாளமே இருக்கிறது.

இறுதிப் போட்டி நடக்கும் காலநிலை குளிர்ச்சியாகவும், மழைப்பொழிவு காலமாக இருந்தால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும். அதிலும் நியூஸிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

பிடிஐ நிறுவனத்துக்கு மான்டி பனேசர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கும் நேரத்தில் சவுத்தாம்டனில் நல்ல மழைக்காலமாக இருக்கும், குளிர்ச்சியான காலநிலை இருக்கும். அதேபோன்ற காலநிலை இருந்தால் நிச்சயம் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியைக் காண சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்திய பேட்ஸ்மேன்களைவிட, நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் ஸ்விங் பந்துவீச்சை நன்றாகச் சமாளித்து விளையாடுவார்கள். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்களை அவ்வாறு கூற முடியாது.

ஆதலால், பந்து ஸ்விங் ஆகும் பட்சத்தில் டெஸ்ட் போட்டியைப் பார்க்க மிகவும் ருசிகரமாக இருக்கும். நியூஸிலாந்து அணியின் ஸ்விங் மற்றும் வேகப்பந்துவீச்சை எவ்வாறு இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளிக்கப் போகிறார்கள் என்பதைக் காணவே சுவாரஸ்யமாக இருக்கும்.

ஆனால், சவுத்தாம்டனில் ஒருவேளை வெயில் காலமாக இருந்தால், மழை பெய்யாமல் இருந்தால், நிச்சயமாக அது இந்திய அணிக்குத்தான் சாதகமாக இருக்கும்.

ஐசிசியைப் பொறுத்தவரை இரு அணிகளுக்கும் கடும் சவாலான ஆடுகளத்தைத்தான் உருவாக்குவார்கள், நிச்சயமாக க்ரீன்டாப் தயார் செய்யமாட்டார்கள். 5 நாட்களும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் போட்டி நடத்தப்பட வேண்டும் என்பதில் ஐசிசி தீவிரமாக இருக்கும்.

இந்தியத் தரப்பில் அஸ்வின், ஜடேஜா, 3 வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்பார்க்கலாம். இறுதிப்போட்டியின்போது சவுத்தாம்டனில் நிலவும் காலநிலை போட்டியின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியமாக அமையும்.

அதேசமயம், நியூஸிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக விளையாடுவது அந்த அணிக்குச் சாதகமானது. அதில் நியூஸிலாந்து அணியை இங்கிலாந்து வென்றால், நம்பிக்கை இழந்துவிடார்கள், இந்திய அணி அதைப் பயன்படுத்தி தங்களின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தலாம்''.

இவ்வாறு பனேசர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x