Last Updated : 24 May, 2021 03:10 AM

 

Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM

விளையாட்டாய் சில கதைகள்: சித்தார்த்தின் அடுத்த லட்சியம்

இந்தியர்கள் அதிகம் சாதிக்காத விளையாட்டுகளில் ஒன்று டைவிங். கடைசியாக கடந்த 1964-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் சோஹான் சிங், அனசூயா பிரசாத் ஆகியோர் இந்தியா சார்பில் இந்த விளையாட்டில் பங்கேற்றனர். அதன்பிறகு இந்திய டைவிங் வீரர்கள் யாரும் சர்வதேச அளவில் இந்த விளையாட்டில் அவ்வளவாக சாதித்தது இல்லை.

இந்நிலையில், இந்த விளையாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார் சித்தார்த் பர்தேஸி. கடந்த 2018-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தகுதிபெற்ற அவர், அதில் பதக்கம் எதையும் வெல்லவில்லை. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தவரான சித்தார்த், ஆரம்பத்தில் நீச்சல் விளையாட்டில்தான் பயிற்சி பெற்றுள்ளார்.

ஆனால், ஒரு கட்டத்தில், தன்னால் நீச்சல் விளையாட்டில் அதிகமாக சாதிக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்ட அவர், டைவிங் பிரிவில் பயிற்சி பெறத் தொடங்கியுள்ளார்.

2006-ம் ஆண்டில் 9 வயது சிறுவனாக டைவிங் பயிற்சியைத் தொடங்கிய சித்தார்த், உள்ளூர் கபடி வீரரான தனது தந்தை கொடுத்த உற்சாகத்தால், பல்வேறு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சித்தார்த்தை பிற்காலத்தில் இந்திய விளையாட்டு ஆணையம் தத்தெடுத்துள்ளது. அங்கு பெற்ற பயிற்சிக்கு பிறகு 2014-ல் நடந்த காமன்வெல்த் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும், பின்னர் தெற்காசிய போட்டி உட்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கான அனுபவத்தை அவருக்கு இந்த போட்டி கொடுத்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக போதிய அளவில் போட்டிகளில் பங்கேற்க முடியாததால், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற அவரால் முடியவில்லை. இந்நிலையில் 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியை லட்சியமாகக் கொண்டு முன்னேறி வருகிறார் சித்தார்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x