Last Updated : 19 May, 2021 11:38 AM

 

Published : 19 May 2021 11:38 AM
Last Updated : 19 May 2021 11:38 AM

உலகக் கோப்பையில் தோற்றதால் எனக்கும், என் மனைவிக்கும் கொலை மிரட்டல் வந்தது: 9 ஆண்டுகளுக்குப் பின் வெளியிட்ட டூப்பிளசிஸ்

தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் டூப்பிளசிஸ் | கோப்புப் படம்.

புதுடெல்லி

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் 3-வது காலிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்ததால், எனக்குத் தனிப்பட்ட முறையில் கொலை மிரட்டல் வந்தது என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டூப்பிளசிஸ் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் 3-வது காலிறுதி ஆட்டம் வங்க தேசத்தில் மிர்பூரில் நடந்தது. இந்த காலிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் 49 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்தது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தத் தோல்விக்குப் பின் தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸுக்கும், அவரின் மனைவிக்கும் கொலை மிரட்டல்கள் வந்ததாக தற்போது அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்இன்போ தளத்துக்கு டூப்பிளசிஸ் அளித்த பேட்டியில் கூறுகையில், “2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி காலிறுதியில் நாங்கள் தோல்வி அடைந்தோம். அந்தப் போட்டி முடிந்த சில மணி நேரங்களில் எனக்குத் தனிப்பட்ட முறையில் கொலை மிரட்டல் வந்தது. என் மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. நாங்கள் உடனடியாக சமூக வலைதளத்திலிருந்து வெளியேறினோம். எங்கள் நாட்டுக்குச் சென்றுவிட்டோம். இது எங்கள் இருவருக்கும் மட்டுமே அறிந்ததாக இருந்தது.

இதுபோன்ற குற்றத்துக்குரிய நிகழ்வுகள் அங்கு நடந்தன. ஆனால், மறுபடியும் நான் செல்லவில்லை. அங்கு எங்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்பதால், அணிக்குள் சிறிய குழுவாக இருக்க நாங்கள் தள்ளப்பட்டோம். எங்கள் அணிக்குள்ளேயே பாதுகாப்பான இடத்தை உருவாக்கவே நான் கடினமாக உழைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வெட்டோரி தலைமையிலான நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 172 ரன்களில் ஆட்டமிழந்தது. டூப்பிளசிஸ் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி மோசமான தோல்வியைச் சந்தித்தது. ஒரு கட்டத்தில் 27 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் என்ற வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா இருந்தது. டுமினி 3 ரன்களிலும், டிவில்லியர்ஸ் 35 ரன்களும் சேர்த்திருந்தபோது, ரன் எடுப்பதில் டூப்பிளசிஸுடன் ஏற்பட்ட குழப்பத்தில் ஆட்டமிழந்தார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் சிறிது நேரத்தில் மடமடவென விக்கெட்டுகள் சரிய 172 ரன்களில் தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது.

இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர் கெயில் மில்ஸை மைதானத்தில் தள்ளிவிட்டதற்காக 50 சதவீதம் அபராதமும் டூப்பிளசிஸுக்கு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x