Last Updated : 17 May, 2021 09:59 AM

 

Published : 17 May 2021 09:59 AM
Last Updated : 17 May 2021 09:59 AM

நியூஸி.க்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணியிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்

ஜோஃப்ரா ஆர்ச்சர் | படம் உதவி: ட்விட்டர்.

லண்டன்

நியூஸிலாந்துக்கு எதிராக மோதவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பாதியிலேயே விலகி, ஐபிஎல் தொடரிலும் பங்கேற்காமல் காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் நாடு திரும்பினார். அங்கு அவருக்கு முழங்கையில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காயம் குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டுத் தேறிய ஆர்ச்சர், சமீபத்தில் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சசெக்ஸ் அணிக்காகக் களமிறங்கினார்.

கென்ட் அணிக்கு எதிராக 5 ஓவர்கள் மட்டுமே வீசிய ஆர்ச்சர் ஒரு விக்கெட்டை வீழ்த்திய நிலையில், அவருக்கு மீண்டும் கையில் வலி ஏற்பட்டது. இதனால் பந்துவீச முடியாமல் சிரமப்பட்ட ஆர்ச்சர், போட்டியிலிருந்து விலகினார்.

இதையடுத்து ஆர்ச்சரின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் காயம் முழுமையாகக் குணமாகவில்லை என்று தெரிவித்ததையடுத்து, நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆர்ச்சர் விலகியுள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ஜோஃப்ரா ஆர்ச்சரின் வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் முழுமையாகச் சரியாகவில்லை. அவர் தொடர்ந்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டியிருப்பதால், நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இந்தியத் தொடருக்கு வரும் முன் வீட்டில் வேலை செய்தபோது, கையில் கண்ணாடித் துண்டு கிழித்து ஆர்ச்சருக்குக் காயம் ஏற்பட்டது. இந்தக் காயத்துடனே இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், டி20 தொடரில் ஆர்ச்சர் விளையாடினார். ஆனால் ஒருநாள் தொடரிலிருந்தும், ஐபிஎல் தொடரிலிருந்தும் ஆர்ச்சர் காயம் காரணமாக விலகி இங்கிலாந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x