Last Updated : 12 May, 2021 06:27 PM

 

Published : 12 May 2021 06:27 PM
Last Updated : 12 May 2021 06:27 PM

நீங்களெல்லாம் ஒன்றுசேருங்கள்: இங்கிலாந்து வீரர்களைத் தூண்டிவிடும் கெவின் பீட்டர்ஸன்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் | கோப்புப் படம்.

லண்டன்

இங்கிலாந்து அணியில் உள்ள சிறந்த வீரர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்தால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி20 போட்டி மீண்டும் நடத்தப்படும்போது விளையாடலாம் என இங்கிலாந்து வீரர்களைத் தூண்டிவிடும் வகையில் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்ஸன் தெரிவித்துள்ளார்.

நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி20 போட்டித் தொடர் மீண்டும் நடத்தப்பட்டால் இங்கிலாந்து வீரர்கள் விளையாடமாட்டார்கள், அவர்களுக்கு தேசிய அணியின் கடமை இருக்கிறது என்று இங்கிலாந்து அணயின் இயக்குனர் ஆஷ்லே கைல்ஸ் தெரிவித்துள்ள நிலையில் பீட்டர்ஸன் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், வீரர்கள் பலர் பயோ-பபுளையும் மீறி தொற்றுக்கு ஆளானதாலும் 14-வது ஐபிஎல் டி20 தொடர் இந்தியாவில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர்.

நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரை இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது. ஒருவேளை வெளிநாட்டில் நடத்தினால், வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவார்களா என்பது தெரியவில்லை.

ஐபிஎல் தொடரில் விளையாடும் பாதி வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள். குறிப்பாக மோர்கன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ போன்றோர் இங்கிலாந்து அணியில் தேசிய அணிக்காக விளையாட உள்ளனர். ஐபிஎல் மீண்டும் நடத்தப்பட்டால் அவர்கள் பங்கேற்பார்களா என்பது சந்தேகம்தான்.

ஐபிஎல் தொடர் மீண்டும் நடத்தப்பட்டால் இங்கிலாந்து வீர்ரகள் பங்கேற்க மாட்டார்கள். தேசிய அணிக்காகவே விளையாடுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஐபிஎல் டி20 தொடர் மீண்டும் நடத்தப்பட்டால், தங்களின் சிறந்த வீரர்களை அதில் விளையாடவிடாமல் எவ்வாறு இங்கிலாந்து அணி தடுக்கப் போகிறது என்பதைப் பார்க்கவும், என்ன நடக்கும் என்பதை அறியவும் ஆர்வமாக இருக்கிறது.

நான் இங்கிலாந்து அணிக்கு எதிராக நின்றபோது என்னுடன் யாருமில்லை, தனியாக இருந்தேன். இந்த நேரத்தில், இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த வீர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நின்றால், ஒற்றுமையாக இருந்தால், அவர்கள் ஐபிஎல் டி20 தொடரில் விளையாட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராகவே அந்த அணி வீரர்களைக் கொம்பு சீவிவிடும் பணியில் பீட்டர்ஸன் இறங்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x