Last Updated : 11 May, 2021 05:19 PM

 

Published : 11 May 2021 05:19 PM
Last Updated : 11 May 2021 05:19 PM

அந்த நாட்கள் திரும்ப வராது; இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் என்றாலே என்ன எனப் புரியவில்லை: கர்ட்லி ஆம்புரோஸ் வேதனை

கோப்புப்படம்

கிங்ஸ்டன்

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் என்றாலே என்ன என இன்னும் முழுமையாகப் புரியவில்லை. நாங்கள் கிரிக்கெட் விளையாடிய அந்தப் பொன்னான நாட்களை இனிவரும் தலைமுறையினரிடம் காணமுடியாது என்று மே.இ.தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கர்ட்லி ஆம்புரோஸ் வேதனையுடன் தெரிவித்தார்.

மே.இ.தீவுகள் அணி 1975, 1979ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதன்பின் இதுவரை ஒருநாள் போட்டிக்கான எந்த உலகக் கோப்பையையும் வாங்கவில்லை. ஆனால், 33 ஆண்டுகளுக்குப் பின், 2012ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், அதன்பின் 2016ஆம் ஆண்டும் வென்றது.

ஆனால், கனவாக இருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை அந்த அணியால் இன்னும் வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் டாக் ஸ்கோப்ர்ட் லைவ் என்ற இணையதளத்துக்கு மே.இ.தீவுகள் ஜாம்பவான் கர்ட்லி ஆம்புரோஸ் பேட்டி அளித்தார். 1998 முதல் 2000ஆம் ஆண்டுவரை கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னர்களில் ஒருவராக வந்த ஆம்புரோஸ், 98 டெஸ்ட் போட்டிகளில் 405 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவர் கூறியதாவது:

''மேற்கிந்தியத் தீவுகளில் மேற்கிந்தியர்களுக்கு கிரிக்கெட் என்றாலே என்ன என முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் மேற்கிந்தியத் தீவுகளிலும், வெளிநாடுகளிலும் இன்றுள்ள பெரும்பாலான இளைஞர்கள் இருக்கிறார்கள். கரீபியன் மக்களை முற்றிலுமாக இணைப்பது கிரிக்கெட் விளையாட்டு மட்டும்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இப்போது இருக்கும் வீரர்களிடம் எனக்கு எந்தவிதமான மதிப்புக் குறைபாடும் இல்லை. ஏனென்றால், இப்போது நம்மிடம் இருக்கும் வீரர்களில் சிலர் சிறப்பாகச் செயல்படுபவர்களாக இருக்கிறார்கள், எதிர்காலத்தில் சிறப்பாக வளர்வார்கள். ஆனால் நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நாங்கள் விளையாடிய அந்தப் பொன்னான, புனிதமான நாட்கள் மீண்டும் வராது. அதை ஒருபோதும் பார்ப்பேன் என்று நான் நினைக்கவில்லை.

மற்றொரு விவியன் ரிச்சார்ட்ஸ், டேமோன்ட் ஹெயின்ஸ், க்ரீனிட்ஜ், பிரையன் லாரா, ரிச்சி ரிச்சர்ட்ஸன் ஆகியோரைப் போல் மற்றொருவரைக் கண்டுபிடிப்பது கடினம். இவர்கள் மட்டுமல்ல மால்கம் மார்ஷல், ஆம்புரோஸ், வால்ஷ், மைக்கேல் ஹோல்டிங், ஆன்டி ராபர்ட்ஸ், லாய்டு எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

இதுபோன்ற தரமான கிரிக்கெட் வீரர்களைக் கண்டறிவது என்பது முற்றிலும் கடினமான செயல். நாங்கள் உலகிலேயே சிறந்த அணியாக இருந்தபோது, உலகம் முழுவதும் சென்று நாங்கள் துணிச்சலாக நடைபோட்டு எங்கள் திறமையை வெளிப்படுத்தினோம், வியக்கவைத்தோம்.

ஆனால், அதுபோன்ற நாட்களை இனிமேல் மீண்டும் பார்ப்பது கடினம். ஐசிசி தரவரிசையில் முன்னேறுவதும் கடினமானதாக இருக்கிறது. நாங்கள் ஆடிய புனிதமான நாட்கள் இனிமேல் வரும் என்று நான் நினைக்கவில்லை''.

இவ்வாறு ஆம்புரோஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x