Last Updated : 08 May, 2021 03:13 AM

 

Published : 08 May 2021 03:13 AM
Last Updated : 08 May 2021 03:13 AM

விளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக்கை புறக்கணித்த சோவியத் யூனியன்

1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியை தாங்கள் புறக்கணிக்கப் போவதாக சோவியத் யூனியன் அறிவித்த நாள் மே 8, 1984.

ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் ராணுவத் தாக்குதல் நடத்தியதைக் கண்டிக்கும் வகையிலும், அந்நாட்டில் இருந்து சோவியத் படைகளை வெளியேற கட்டாயப்படுத்தும் வகையிலும் 1980-ம் ஆண்டில் மாஸ்கோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியை அமெரிக்காவும், அதற்கு நெருக்கமாக இருந்த 65 நாடுகளும் புறக்கணித்தன.

இதனால் 1980-ம் ஆண்டில் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டி களையிழந்து காணப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்க சோவியத் யூனியன் காத்திருந்தது.

இந்தச் சூழலில்தான் 1984-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் தங்கள் நாட்டில் நடந்த ஒலிம்பிக்கை புறக்கணித்த அமெரிக்காவை பழிவாங்கும் வகையில், இப்போட்டியை புறக்கணிப்பதாக சோவியத் யூனியன் மே 8-ம் அறிவித்தது. சோவியத் யூனியனுக்கு எதிரான மனப்பான்மை அமெரிக்காவில் நிலவுவதால், தங்கள் வீரர்கள் அந்நாட்டில் விளையாடுவது பாதுகாப்பாக இருக்காது என்று இதற்கு சோவியத் யூனியன் காரணம் சொன்னது.

சோவியத் யூனியனைத் தொடர்ந்து, அதற்கு ஆதரவாக இருந்த வியட்நாம், கிழக்கு ஜெர்மனி, பல்கேரியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்த ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதன் காரணமாக 140 நாடுகள் மட்டுமே இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றன. வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில், தாங்கள் இந்தப் போட்டியை புறக்கணிப்பதாக ஈரான் கூறியது.

இந்த ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணித்த நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து அதே ஆண்டில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், ‘பிரண்ட்ஷிப் கேம்ஸ்’ என்ற பெயரில் ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியை நடத்தின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x