Last Updated : 06 May, 2021 03:12 AM

 

Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: ஜேம்ஸ் பாண்டால் உருவான வீரர்

இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடும் வீரரான ககன் நாரங்கின் பிறந்தநாள் இன்று (மே 6).

ககன் நாரங்குக்கும், சென்னை நகருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவரது பெற்றோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ககன் நாரங் சென்னையில் 1983-ம் ஆண்டில் பிறந்தார். ஏர் இந்தியாவில் பணியாற்றி வந்த அவரது தந்தையார் பீஷ்மன் நாரங், அப்போது சென்னையில் பணியாற்றி வந்தார். ககன் நாரங் பிறந்த சில நாட்களிலேயே, அவரது தந்தை ஹைதராபாத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

ககன் நாரங்குக்கு துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் ஏற்படுவதற்கு ஜேம்ஸ் பாண்டும் ஒரு முக்கிய காரணம். சிறுவயதில் ஜேம்ஸ் பாண்டின் படங்களை ககன் நாரங் விரும்பிப் பார்ப்பார். தான் பெரியவனானதும் ஜேம்ஸ் பாண்டைப் போல் குறிபார்த்துச் சுடுவேன் என அனைவரிடமும் சொல்லிக்கொண்டு இருப்பாராம். ஆரம்பத்தில் பொம்மைத் துப்பாக்கிகளை வைத்து பலூன்களை குறிபார்த்து அவர் சுட்டுள்ளார். இந்த ஆர்வத்தைப் பார்த்த ககன் நாரங்கின் தந்தை 1997-ம் ஆண்டில் அவருக்கு ஒரு பிஸ்டலைப் பரிசளித்தார். இது அவரது துப்பாக்கி சுடும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்காக பல சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிகளில் பதக்கங்களை வென்ற ககன் நாரங், உச்சம் தொட்டது 2012-ம் ஆண்டில் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில்தான். இந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து முதல் ஆளாக தகுதிபெற்ற ககன் நாரங், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதைத்தவிர ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இவர் 5 பதக்கங்களை வென்றுள்ளார்.

துப்பாக்கி சுடும் வீரராக இருப்பது மட்டுமின்றி, புதிய துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்குவதற்கான பயிற்சி மையம் ஒன்றையும் புனே நகரில் தனது நண்பர் பவன் சிங்குடன் சேர்ந்து ககன் நாரங் தொடங்கியுள்ளார். இவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 2011-ம் ஆண்டில் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x