Last Updated : 05 May, 2021 05:57 PM

 

Published : 05 May 2021 05:57 PM
Last Updated : 05 May 2021 05:57 PM

கேப்டனுடனும், நிர்வாகத்துடனும் நெருக்கமாக இருந்தால்தான் பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு கிடைக்கும்: ஜூனைத் கான் சாடல்

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஜூனைத் கான் | படம் உதவி: ட்விட்டர்.

கராச்சி

பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற வேண்டுமென்றால், கேப்டனுடனும், அணி நிர்வாகத்துடனும் நெருக்கமாகப் பழகி, தொடர்பில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பு கிடைக்காது என்று பாகிஸ்தானின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜூனைத் கான் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

31 வயதான பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஜூனைத் கான், 22 டெஸ்ட் போட்டிகளில் 190 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 76 ஒருநாள், 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், 2019ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து ஜூனைத் கானை பாகிஸ்தான் அணி தேர்வு செய்யாமல் இருக்கிறது.

இந்நிலையில் கிரிக்கெட் பாகிஸ்தான்.காம் என்ற இணையதளத்துக்கு ஜூனைத் கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''கேப்டனுடனும், அணி நிர்வாகத்துடனும் நமக்கு நல்ல நட்பு தொடர்ந்தால், அனைத்துவிதமான போட்டிகளிலும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். நமது திறமையை நிரூபிக்கலாம். ஆனால், கேப்டனுடனும், நிர்வாகத்துடனும் நெருக்கமாக இல்லாவிட்டால், அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள். இதுதான் பாகிஸ்தான் அணியின் நிலைமை.

நான பாகிஸ்தான் அணியின் 3 பிரிவுகளிலும் விளையாடினேன். ஆனால், நான் ஓய்வு கேட்காமல் எனக்கு நிர்வாகம் ஓய்வளித்துவிட்டது. என் மீதான திடீர் விருப்பு வெறுப்புகளால் என்னைத் தேர்வு செய்யவில்லை. எனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டபோதிலும் எனக்கு வாய்ப்பு தொடர்ந்து வழங்கவில்லை.

2017ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி போட்டியில் ஹசன் அலிக்கு அடுத்து நான்தான் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தினேன். ஆனால், 2019ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து என்னை அணி நிர்வாகம் ஒதுக்கி வைத்துள்ளது.

நான் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறேன். நிச்சயம் மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்கும்.

மிகப்பெரிய நகரத்தின் பின்புலத்திலிருந்து வந்திருந்தால், நமக்காக அந்தப் பகுதி மக்கள் குரல் கொடுப்பார்கள். ஆனால் நான், யாஷிர்ஷா போன்றோர் சிறிய கிராமத்திலிருந்து வந்தோம். எனக்குக் குரல் கொடுக்க தொலைக்காட்சி சேனலோ அல்லது ஊடகத்தினரோ இல்லை. தேர்வாளர்களுக்கு அணித்தேர்வு குறித்து எந்த ஊடகமும் நெருக்கடி கொடுக்கவில்லை.

இரு போட்டிகளில் சரியாக விளையாடாவிட்டாலும் அணயிலிருந்து நீக்கப்படும் நிலைதான் இருக்கிறது. நம்முடைய கலாச்சாரத்தில் ஒரு வீரர் 6 ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்டாலும், 2 போட்டிகளில் சிறப்பாக ஆடாவிட்டால், அவரை நீக்கிவிட்டு வேறு ஒரு வீரர் கொண்டுவரப்படுகிறார்.

ஒரு வீரர் 6 ஆண்டுகளாக எப்படி விளையாடினார் என்பதை நினைக்க மறந்துவிடுகிறார்கள். இளம் வீரர்களைத் தேர்வு செய்கிறோம் என்கிறார்கள். இதனால், வீரர்களுக்குத் தங்களின் இடம் உறுதியில்லாமல் இருக்கிறது.

மற்ற நாடுகளில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான சுமையை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை பாகிஸ்தான் தேர்வாளர்களும், நிர்வாகத்தினரும் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக அணி வீரர்களை இங்கிலாந்து எவ்வாறு கையாள்கிறது என்பதை அறிய வேண்டும். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆன்டர்ஸன், பிராட் இருவருக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது''.

இவ்வாறு ஜூனைத் கான் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x