Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
அமெரிக்காவின் புகழ்பெற்ற தடகள வீரராக இருந்த ஜெஸ்சி ஓவன்ஸ், 1935-ம் ஆண்டில் இந்த நாளில்தான் (மே 5) 8.13 மீட்டர் நீளம் தாண்டி, இப்போட்டியில் புதிய உலக சாதனையைப் படைத்தார்.
ஜெஸ்சி ஓவன்ஸின் முழுப் பெயர் ஜேம்ஸ் கிளீவ்லேண்ட் ஜெஸ்சி ஓவன்ஸ். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 1913-ம் ஆண்டில் அவர் பிறந்தார். ஜெஸ்சி ஓவன்ஸின் பெற்றோருக்கு மொத்தம் 10 குழந்தைகள். இதில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் 10-வது குழந்தை. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், ஜெஸ்சி ஓவன்ஸ் சிறு வயதில் பல்வேறு வேலைகளைச் செய்து குடும்பத்துக்கு உதவியாக இருந்துள்ளார். மளிகைக்கடை பொருட்களை வீட்டுக்கு கொண்டுபோய்க் கொடுக்கும் வேலை, செருப்பு தைக்கும் வேலை, கார் மற்றும் லாரிகளில் லோடு ஏற்றுவது என பல்வேறு வேலைகளை அவர் செய்துள்ளார். இந்த சமயத்தில் அவர் படித்த பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக இருந்த சார்லஸ் ரிலே என்பவர், அவருக்கு ஓட்டப்பந்தயத்தில் சிறப்பான எதிர்காலம் இருப்பதாக கணித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜெஸ்சி ஓவன்ஸுக்கு அவர் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளார். ஆசிரியரின் கணிப்பு தவறவில்லை. பின்னாளில் அமெரிக்காவின் தலைசிறந்த தடகள வீரராக ஜெஸ்சி ஓவன்ஸ் உருவெடுத்துள்ளார்.
1935-ம் ஆண்டில் நடந்த சர்வதேச போட்டி ஒன்றில் 8.13 மீட்டர் நீளம் தாண்டி உலக சாதனை படைத்தார் ஜெஸ்சி ஓவன்ஸ். இருப்பினும் அவர் புகழின் உச்சத்தை தொட்ட ஆண்டு 1936. இந்த ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், 4×100 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டும் போட்டி என 4 பிரிவுகளில் ஜெஸ்சி ஓவன்ஸ் தங்கப்பதக்கம் வென்றார். அன்றைய காலகட்டத்தில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT