Last Updated : 04 May, 2021 07:12 PM

 

Published : 04 May 2021 07:12 PM
Last Updated : 04 May 2021 07:12 PM

‘ஆஸி. பிரதமரே! உங்கள் கரங்களில் ரத்தக்கறை படிந்துள்ளது’; ஐபிஎல் பயோ-பபுளில் கிரேட் எஸ்கேப்: மாலத்தீவு சென்றார் மைக்கேல்

ஆஸ்திரேலிய வர்ணனையாளர் மைக்கேல் ஸ்லாடர் | கோப்புப் படம்.

மெல்போர்ன்

ஐபிஎல் டி20 தொடரில் வர்ணனையாளராகப் பணிபுரிந்து வந்த ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாடர், இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பைப் பார்த்து, பயோ-பபுளில் இருந்து விலகி மாலத்தீவு சென்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து வரும் ஆஸ்திரேலிய குடிமகன்கள் யாரும் மே 15-ம் தேதிவரை ஆஸ்திரேலியாவுக்குள் வரக்கூடாது என பிரதமர் ஸ்காட் மோரிஸன் தடை விதித்துள்ளார்.

விமானச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்துதானே விமானங்கள் வரக்கூடாது, ஆஸ்திரேலியர்கள் வரக்கூடாது, மாலத்தீவிலிருந்து வரலாமே என்பதால், மைக்கேல் ஸ்லாடர் மாலத்தீவு சென்றதாக ஆஸ்திேரலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் சொந்தச் செலவில்தான் தாயகம் திரும்ப வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இதனால், ஐபிஎல் பயோ-பபுளில் இருந்து நேற்று முன்தினம் விலகிய ஸ்லாடர் மாலத்தீவு சென்றுள்ளார்.

ஆஸ்திரேலியர்கள் மே 15-ம் தேதிவரை ஆஸ்திரேலியாவுக்குள் வரக்கூடாது என்று பிரதமர் மோரிஸன் விதித்த தடைக்கு மைக்கேல் ஸ்லாடர் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்லாடர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நம்முடைய அரசு ஆஸ்திரேலிய மக்களின் பாதுகாப்பில் அக்கறை இருப்பதாக இருந்தால், நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கும். ஆனால், தடை விதித்திருப்பது மிகப்பெரிய அவமானம். பிரதமரே! உங்கள் கரங்களில் ரத்தக்கறை படிந்துள்ளது.

பிரதமர் இப்படி எங்களை நடத்துவதற்கு உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும். தனிமைப்படுத்தும் முறையை எவ்வாறு நீங்கள் வகுக்கிறீர்கள். ஐபிஎல் தொடரில் பணியாற்ற ஆஸ்திரேலிய அரசிடம் நான் முன் அனுமதி பெற்றுத்தான் சென்றேன். ஆனால், இப்போது என்னை நாட்டுக்குள் அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு மறுக்கிறது” எனத் தெரிவித்தார்.

ஸ்காட் மோரிஸன்

மைக்கேல் ஸ்லாடர் கூறிய கருத்துக்கு பதில் அளித்த பிரதமர் ஸ்டாக் மோரிஸன் கூறுகையில், “ஸ்லாடர் கருத்து அபத்தமாக இருக்கிறது. உள்நாட்டில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 3-வது அலை வராமல் தடுக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டது. ஒவ்வொரு செயல்பாட்டு முறையும் வேதனை தரலாம். ஆனால், நான் எதையும் சிதைக்கவில்லை. நீண்ட காலத்துக்கு ஆஸ்திரேலிய மக்கள் பாதுகாப்பாக, உடல்நலத்துடன் இருக்கவே இந்த முடிவை எடுத்தேன்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x