Last Updated : 04 May, 2021 06:26 PM

 

Published : 04 May 2021 06:26 PM
Last Updated : 04 May 2021 06:26 PM

நவம்பரில் கரோனா 3-வது அலை? டி20 உலகக் கோப்பை தொடரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற பிசிசிஐ திட்டம்?

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

இந்தியாவில் நவம்பர் மாதம் கரோனா வைரஸ் 3-வது அலை வர வாய்ப்புள்ளதாக எழுந்த தகவலையடுத்து, டி20 உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

16 அணிகள் மோதும் டி20 உலகக் கோப்பை போட்டியின்போது, நவம்பரில் இதேபோன்று கரோனா வைரஸ் தாக்குதல் நேர்ந்தால், போட்டியைத் தொடர்ந்து நடத்துவதிலும், வேறு இடத்துக்கு மாற்றுவதிலும் சிக்கல் ஏற்படும். ஆதலால், போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்குக் கொண்டுசெல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த மாதத்துக்குள் அதற்கான முடிவு எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

சமீபத்தில் மத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளுடன் பிசிசிஐ உயர் அதிகாரிகள் டி20 உலகக்கோப்பையை மாற்றுவது குறித்த ஆலோசித்துள்ளனர். இதற்கு மத்திய அரசு தரப்பிலும் ஏறக்குறைய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் உலகக் கோப்பை போட்டி நடத்தும் இடங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு, தேதிகள் குறித்து ஏதும் அறிவிக்கவில்லை.

பிசிசிஐ மூத்த அதிகாரிகள் கூறுகையில், “ஐபிஎல் டி20 தொடரை 4 வாரங்கள் நிறுத்தியது என்பது இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடத்துவது பாதுகாப்பானது அல்ல என்பதற்கான சமிக்ஞை. டி20 உலகக் கோப்பை போட்டி நடக்கும் நேரத்தில் இந்தியாவில், கரோனா 3-வது அலைகூட வரலாம் எனப் பேசப்படுகிறது.

ஆதலால், டி20 உலகக் கோப்பை போட்டியை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்தியாவில் சூழல் இயல்புக்கு வரும்வரை அடுத்த 6 மாதங்களுக்கு உலகக் கோப்பையில் பங்கேற்கும் முக்கிய நாடுகள் இந்தியா வருவதை விரும்பாது.

அதுமட்டுமல்லாமல் தொடரின் நடுப்பகுதியில் பயணம் செய்து வேறு இடத்துக்குச் செல்லவும் வீரர்களும், குடும்பத்தினரும் அசவுகரியப்படுவார்கள். ஆதலால், போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற ஆலோசித்து வருகிறோம்.

கரோனா 2-வது அலை இருந்தாலும், ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்துவோம், பயோ-பபுள் பாதுகாப்பானது என்பதை உலகிற்குத் தெரியவைக்க விரும்பினோம். ஆனால், பயோ-பபுள் சூழலே கேள்விக்குறியாகிவிட்டது. ஆதலால், எந்த உறுதிமொழியை அக்டோபர் நவம்பரில் அளிக்க முடியும். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்தியா வரத் தயங்கும்’’ எனத் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக் கோப்பை டி20 தொடர் நடத்தப்படும் என்றால், அது ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய 3 நகரங்களில் மட்டுமே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x