Last Updated : 03 May, 2021 02:20 PM

 

Published : 03 May 2021 02:20 PM
Last Updated : 03 May 2021 02:20 PM

பயோ-பபுளுக்குள்ளும் புகுந்த கரோனா; வருண், வாரியருக்குத் தொற்று: இன்று நடக்க இருந்த கொல்கத்தா-ஆர்சிபி போட்டி ஒத்திவைப்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வருண் சக்ரவர்த்தி | கோப்புப்படம்

புதுடெல்லி

பயோ-பபுளை உருவாக்கி அதற்குள் வீரர்களைப் பாதுகாப்பாக வைத்து ஐபிஎல் டி20 தொடர் நடத்தப்பட்ட நிலையில் அதற்குள்ளும் கரோனா வைரஸ் புகுந்து தனது வேலையைக் காட்டி, போட்டியை நிறுத்திவிட்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று நடக்க இருந்த கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எப்போது நடத்தப்படும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

கரோனா வைரஸுக்கு பயந்து ஐபிஎல் நிர்வாகம் கடும் பாதுகாப்புடன், பலகட்ட பரிசோதனைகளுடன் பயோ-பபுளை உருவாக்கி வீரர்கள், அணி குழுவினரை அதற்குள் கொண்டு வந்தது. ஆனால், பல அடுக்குப் பாதுகாப்பையும் மீறி கரோனா புகுந்துவிட்டது.

இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது

''கடந்த 4 நாட்களில் நடத்தப்பட்ட 3-வது சுற்று கரோனா பரிசோதனையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு நெகட்டிவ் வந்துள்ளது.

வருண், வாரியர் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் கடந்த 7 போட்டிகளாக ப்ளேயிங் லெவனில் வாரியர் இடம்பெறவில்லை. இருவரின் உடல்நிலையையும் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இனிமேல் வீரர்கள் அனைவருக்கும் நாள்தோறும் கரோனா பரிசோதனை செய்யும் முடிவுக்கு வந்துள்ளது.

வருண், வாரியர் இருவருடனும் கடந்த 48 மணி நேரத்தில் அதிக நெருக்கமாகப் பழகிய வீரர்களின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடைசியாக கடந்த மாதம் 29-ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் கொல்கத்தா அணி மோதியது. இதுவரை ஐபிஎல் தொடர் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் சென்ற நிலையில் இப்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தில் தங்கியுள்ள டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் ஒவ்வொருவரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். அவர்களின் உடல்நிலையும் கண்காணிக்கப்பட உள்ளது.

சந்தீப் வாரியர்

ஐபிஎல் விதிமுறையின்படி, பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக இருந்தவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு 1,3,6ஆம் நாட்களில் கரோனா பரிசோதனை செய்யவேண்டும். 3 பிரிசோதனைகளிலும் நெகட்டிவ் வர வேண்டும்.

கடந்த மாதம் 21-ம் தேதி மும்பையில் ஒரே ஹோட்டலில்தான் சிஎஸ்கே அணியினரும், கொல்கத்தா அணியினரும் தங்கியுள்ளனர். தற்போது வருண் சக்ரவர்த்திக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். முடிவுகளை எதிர்பார்த்து சிஎஸ்கே நிர்வாகம் காத்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x