Published : 30 Apr 2021 12:36 PM
Last Updated : 30 Apr 2021 12:36 PM

நான் கூட ஒரு ஓவரில் 6 பவுண்டரி அடித்தது இல்லை: பிரித்வி ஷாவை பாராட்டிய வீரேந்திர சேவாக்

டெல்லி கேபிடல்ஸ் வீரர் பிரித்வி ஷா | படம் உதவி ட்விட்டர்

மும்பை

நான் தொடக்க வீரராக களமிறங்கிய காலத்தில்கூட ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்தது இல்லை. பிரித்வி ஷாவின் ஆட்டம் பிரமாதமாக இருந்தது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்தார்.

அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. 155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 21 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பிரித்வி ஷாவின் அசுரத்தனமான பேட்டிங், மாஸ்டர்கிளாஸ் பேட்டிங் மட்டும்தான். மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா 41 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து(11பவுண்டரி, 3சிக்ஸர்) ஆட்டநாயகன் விருது வென்றார்.

ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரிலேயே 6 பந்துகளுக்கு 6 பவுண்டரி அடித்து பிரித்வி ஷா மிரட்டினார். ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை அடித்த வகையில் ரஹானேவுக்கு அடுத்தார்போல் பிரித்வி ஷா 2-வது வீரர் ஆவார்.

பிரித்வி ஷா ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

6 பந்துகளில் 6 பவுண்டரி அடித்த பிரித்வி ஷாவுக்கு பாராட்டுக்கள். ஒவ்வொரு பவுண்டரியும், பீல்டர்களுக்கு இடையே சரியான இடைவெளியில், தடுக்க முடியாத வகையில் சென்றது. என்னுடைய சர்வதேச கிரிக்ெகட் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில்கூட இதுபோன்று 6 பந்துகளுக்கு 6 பவுண்டரிகளைஅடித்தது இல்லை.

ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடிக்க வேண்டும், 6 பவுண்டரிகளை அடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் ஆனால், என்னால் 18 முதல் 20 ரன்கள் வரை மட்டுமே அடிக்க முடிந்தது, 6 சிக்ஸர்களையோ அல்லது 6 பவுண்டரிகளையோ அடித்தது இல்லை. ஆனால் பிரித்வி ஷா அடித்தது பிரமாதமான ஷாட்கள், ஒவ்வொரு ஷாட்டும் தேர்ந்தெடுத்து ஆடப்பட்டவை

19 வயதுக்குட் பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் ஷிவம் மாவியின் பந்துவீச்சை நன்கு விளையாடிப் பழகியதால் என்னவோ பிரித்வி ஷாவுக்கு எளிதாக அடிக்க முடிந்திருக்கும். அப்படிப் பார்த்தால், எனக்கு பலமுறை வலைப்பயற்சியில் ஆஷிஸ் நெஹ்ரா பந்துவீசியுள்ளார், ஆனால், உள்நாட்டுப் போட்டிகளில் ஒருமுறை கூடஅவர் பந்துவீச்சில் நான் 6பவுண்டரி அடித்தது இல்லை.

பிரித்வி ஷா இதுபோன்று நீண்ட இன்னிங்ஸ் ஆடும்போது, முடிந்தவரை சதமாக மாற்ற முயல வேண்டும். பிரித்வி ஷா சதம் அடித்திருந்தால் நான் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x