டெல்லியிலும் ஜடேஜா அசத்தல்: 121 ரன்னில் சுருண்டது தெ.ஆ.- இந்தியா 213 ரன்கள் முன்னிலை

டெல்லியிலும் ஜடேஜா அசத்தல்: 121  ரன்னில் சுருண்டது தெ.ஆ.- இந்தியா 213 ரன்கள் முன்னிலை
Updated on
2 min read

டெல்லி டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 334 ரன்கள் குவித்தது. ரஹானே சதம் விளாசினார். தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 121 ரன்னில் சுருண்டது. ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார்.

டெல்லி பெரோஷாகோட்லா மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா வுக்கு எதிராக நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 12, ஷிகர் தவண் 33, புஜாரா 14, விராட் கோலி 44, ரோஹித் சர்மா 1, விருதிமான் சஹா 1, ஜடேஜா 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரஹானே 89, அஸ்வின் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

நேற்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இருவரும் தொடர்ந்து விளையாடினர். ரஹானே 180 பந்தில், 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். சர்வதேச போட்டிகளில் இது அவருக்கு 5வது சதமாக அமைந்தது. சதம் விளாசிய உடன் பியட் வீசிய ஒரே ஓவரில் ரஹானே 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.

ஸ்கோர் 296 ஆக இருந்த போது ரஹானே ஆட்டமிழந்தார். 304 நிமி டங்கள் களத்தில் நின்று 215 பந்தில், 11 பவுண்டரிகள், 4 சிக்ஸருடன் 127 ரன் எடுத்த அவர் இம்ரன் தகிர் பந்தில், டி வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 8வது விக்கெட்டுக்கு ரஹானே-அஸ்வின் ஜோடி 98 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து உமேஷ் யாதவ் களமிறங்கினார். அஸ்வின் 116 பந் தில், 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். 56 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் ஆட்ட மிழந்தார். இந்த விக்கெட்டை கைல் அபாட் கைப்பற்றினார். கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய இஷாந்த் சர்மா ரன் எதும் எடுக்காமல் கைல் அபாட் பந்தில் வெளியேற இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 177.5 ஓவரில் 334 ரன்களுக்கு முடிவடைந்தது. உமேஷ் யாதவ் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் கைல் அபாட் 5, டேன் பியட் 4, இம்ரன் தகிர் 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தொடங்கியது. டீன் எல்கர், பவுமா தொடக்க வீரர் களாக களமிறங்கினர். ஸ்கோர் 36 ஆக இருந்த போது எல்கர் 17 ரன்னில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர் களில் ஜடஜோ பந்தில் பவுமா போல் டானார். அவர் 22 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய ஆம்லா 3, டு பிளெஸ்ஸி ரன் எதும் எடுக்காத நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்ட மிழந்தனர். 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டுமினி 8 பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் போல்டானார். அதன் பின்னர் வந்த விலாஸ் 11 ரன்னிலும், கைல் அபாட் 4 ரன்னிலும் நடையை கட்டினர். இந்த விக்கெட்டுகளை முறையே இஷாந்த் சர்மா, அஸ்வின் கைப்பற்றினர்.

37.5 ஓவரில் 84 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டி வில்லியர்ஸ் போராடினார். 40.2 ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி 100 ரன்களை கடந்தது. ஸ்கோர் 103 ஆக இருந்த போது டேன் பியட் 5 ரன்னில் ஜடேஜா பந்தில் வெளியேறினார். 78 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 42 ரன் எடுத்த நிலையில் டி வில்லியர்ஸ், ஜடேஜா பந்தில், இஷாந்த் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி வீரராக இம்ரன் தகிரை 1 ரன்னில் அஸ்வின் வெளியேற்ற தென் ஆப்பிரிக்க அணி 49.3 ஓவரில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் இந்தியாவே 2வது இன்னிங்ஸில் பேட் செய்ய முடிவு எடுத்தது. ஆனால் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் அத்துடன் 2வது நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. இந்திய தரப்பில் ஜடேஜா 5, அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 2, இஷாந்த் சர்மா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் முன்னிலைப்பெற்றுள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in