Last Updated : 29 Apr, 2021 03:13 PM

 

Published : 29 Apr 2021 03:13 PM
Last Updated : 29 Apr 2021 03:13 PM

கரோனா அச்சத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து நடுவர் நிதின் மேனன் விலகல்: மற்றொரு நடுவரால் இந்தியாவிலிருந்து வெளியேற முடியவில்லை

ஐபிஎல் நடுவர் நிதின் மேனன் | படம் உதவி: ட்விட்டர்.

புதுடெல்லி

நாட்டில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் அச்சத்தால், ஐபிஎல் டி20 தொடரிலிருந்து நடுவர் நிதின் மேனன் பாதியிலேயே விலகியுள்ளார்.

ஆஸ்திரேலிய நடுவர் பால் ரீஃபெல் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்த நிலையில், ஆஸ்திரேலிய விமானம் ரத்து செய்யப்பட்டதால், இந்தியாவிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டார்.

இந்நிலையில், இந்தூரைச் சேர்ந்த நிதின் மேனனின் குடும்பத்தில் அவரின் மனைவிக்கும், தாயாருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, ஐபிஎல் பயோ-பபுள் சூழலிலிருந்து வெளியேறி, தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளதை அடுத்து, தனது தாய்நாட்டுக்குச் செல்லத் தொடரிலிருந்து பால் ரீஃபெல் விலகினார். தோஹா நகரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல பால் ரீஃபெல் திட்டமிட்டார்.

ஆனால், தோஹா நகரிலிருந்து வரும் விமானங்களுக்கும் ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு பால் ரீஃபெல் செல்ல முடியாமல் இந்தியாவிலேயே சிக்கிக் கொண்டார். ஐபிஎல் முடியும் வரை இந்தியாவிலிருந்து ரீஃபெல் செல்ல முடியாது.

ஆஸி.நடுவர் பால் ரீஃபெல்

இது தொடர்பாக பால் ரீஃபெல், தி ஹெரால்ட் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸையடுத்து, விமானங்கள் வர ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் நேரடியாக ஆஸ்திரேலியா வர முடியாது. ஆதலால், கத்தார் தலைநகர் தோஹா சென்று அங்கிருந்துதான் ஆஸ்திரேலியா வர வேண்டும்.

ஆனால், கத்தார் விமானங்களுக்கும் ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளதால், என்னால் அங்கு செல்ல முடியாது. நல்ல வேளையாக பயோ-பபுளை விட்டு வெளியேறவில்லை. முன்பதிவு செய்திருந்த விமான டிக்கெட்டையும் ரத்து செய்துவிட்டேன்” எனத் தெரிவித்தார்.

இதனால் ஐபிஎல் தொடர் முடியும்வரை பால் ரீஃபெல் இந்தியாவில்தான் இருக்க வேண்டும். ஐபிஎல் பயோ-பபுள் சூழலில் இருந்து ரீஃபெல் வெளியேறி இருந்தால், மீண்டும் ஐபிஎல் தொடரில் நடுவராகப் பணியாற்ற 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனை செய்துகொண்டுதான் வர முடியும்.

வீரர்களைப் பொறுத்தவரை ரவிச்சந்திர அஸ்வினின் குடும்ப உறுப்பினர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவர் ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார்.

இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்ப்பா, ஆண்ட்ரூ டை, இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x