Published : 28 Apr 2021 03:12 AM
Last Updated : 28 Apr 2021 03:12 AM

எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினர்: கொல்கத்தா கேப்டன் மோர்கன் புகழாரம்

அகமதாபாத்

ஐபிஎல் டி 20 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தங்களது பந்து வீச்சாளர்களிடமிருந்து மிகவும் ஈர்க்கக்கூடிய செயல்திறன் வெளிப்பட்டதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயன் மோர்கன் தெரிவித்தார்.

ஐபிஎல் டி 20 தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தங்களது கட்டுக்கோப்பான பந்து வீச்சால் 123 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. தொடர்ந்து எளிதான இலக்கை விரட்டிய கொல்கத்தா அணியானது கேப்டன் இயன் மோர்கன் (47), ராகுல் திரிபாதி (41) ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் 20 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு இது 2வது வெற்றியாக அமைந்தது.

போட்டி முடிவடைந்ததும் இயன் மோர்கன் கூறும்போது, "அணியை வழிநடத்தியது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்துள்ளோம், ஆனால் ஆரம்பத்தில் நாங்கள் விரும்பியதைப் போல செயல்படவில்லை. பஞ்சாப் அணிக்கு எதிராக எங்கள் செயல்திறன் உண்மையிலேயே மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் இருந்தது, குறிப்பாக எங்கள் பந்து வீச்சாளர்களிடமிருந்து சிறந்த திறன் வெளிப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே பஞ்சாப் அணி மீது அழுத்தத்தை முழுவதும் வைத்திருந்தோம்.

ஷிவம் மாவி இந்த சீசனில் 2வது ஆட்டத்திலேயே விளையாடுகிறார். நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை ஒரே ஆட்டத்தில் பயன்படுத்துவது நாங்கள் அடிக்கடி செய்யாத ஒன்று. கெயிலை அபாரமாக ஆட்டமிழக்கச் செய்தார் ஷிவம் மாவி. கடந்த ஆட்டத்தில் இருந்தே அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் எங்களிடம் உள்ள நன்மை என்னவென்றால், பெரும்பாலான சுழற்பந்து வீச்சாளர்களைக் காட்டிலும் மாறுபட்ட சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

இன்றைய ஆட்டம்

சென்னை - ஹைதராபாத்

இடம்: டெல்லி

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x