Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM
வியட்நாம் போரில் பங்கேற்க அமெரிக்க ராணுவத்தில் சேருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, முகமது அலி புறக்கணித்த நாள் ஏப்ரல் 28, 1967.
1960-களில் வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இப்போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது. இந்தச் சூழலில், அமெரிக்க ராணுவத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தது. சில விளையாட்டு வீரர்களுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான முகமது அலிக்கும் அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தது. ஆனால் இந்த அழைப்பை முகமது அலி புறக்கணித்தார். ராணுவத்தில் சேர மறுத்தார்.
வியட்நாமியர்களுடன் போரிட தான் தயாராக இல்லை என்று பகிரங்கமாக அறிவித்த முகமது அலி, அமெரிக்க ராணுவம் தனக்கு விடுத்த 3 அழைப்புகளையும் நிராகரித்தார். இதைத்தொடர்ந்து, ‘ராணுவத்தில் சேர மறுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று முகமது அலிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் முகமது அலி அசரவில்லை. இதைத்தொடர்ந்து அவர் வென்ற குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. ராணுவ விதிகளை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதுடன், 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 ஆண்டுகள் அவரால் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. 1970-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அட்லாண்டா நகரில் நடந்த குத்துச்சண்டை போட்டியில்தான் முகமது அலி மீண்டும் பங்கேற்றார். ஜெர்ரி குவாரி என்ற வீரருக்கு எதிரான இந்த குத்துச்சண்டை போட்டியில் நாக் அவுட் முறையில் முகமது அலி வென்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT