Last Updated : 27 Apr, 2021 02:49 PM

 

Published : 27 Apr 2021 02:49 PM
Last Updated : 27 Apr 2021 02:49 PM

ஐபிஎல் முடியும்வரை வரமாட்டோம்; தாயகம் திரும்பத் தனி விமானம்: ஆஸி.வாரியத்துக்கு கிறிஸ் லின் வேண்டுகோள்

மும்பை இந்தியன்ஸ் வீரர் கிறிஸ் லின் | படம் உதவி: ட்விட்டர்.

புதுடெல்லி

ஐபிஎல் டி20 தொடர் முடியும்வரை இந்தியாவில்தான் இருப்போம், தொடர் முடிந்தபின் ஆஸ்திரேலிய வீரர்கள் தாயகம் திரும்பத் தனியாக விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு அந்நாட்டு வீரர் கிறிஸ் லின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து, 2-வது அலை தீவிரமாகியிருப்பதை அடுத்து, ஐபிஎல் தொடரிலிருந்து பல வீரர்கள் பாதியிலேயே விலகினர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்ப்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மே 15ஆம் தேதிவரை இந்தியாவிலிருந்து எந்தப் பயணிகள் விமானம் வரவும் ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது.

இதற்கிடையே ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர் ஆகியோரின் பயணத் திட்டம், எப்போது புறப்படுகிறார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரித்துள்ளது. அப்போது, ஐபிஎல் டி20 தொடர் முடியும் வரை இந்தியாவில்தான் இருப்போம் என வாரியத்திடம் வீரர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ''ஒவ்வொரு ஐபிஎல் ஒப்பந்தத்திலும் 10 சதவீதத் தொகையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெற்று வருவதால், இந்த முறை போட்டி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தனியாக விமானம் வைத்து வீரர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என முன்பே ஆஸ்திரேலிய வாரியத்திடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

எங்களை விட இந்திய மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது எனக்குத் தெரியும். ஆனால், நாங்கள் மிகவும் கடினமான பயோ-பபுள் சூழலில் இருக்கிறோம். அதன் அழுத்தமும் எங்களுக்கு இருக்கிறது.

கிறிஸ் லின்

அடுத்த வாரத்தில் வீரர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஐபிஎல் தொடர் முடிந்தவுடன், ஆஸ்திரேலிய வீரர்களைத் தனி விமானத்தில் அழைத்துச் செல்ல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் தற்போது மிகவும் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த நேரத்தில் மக்களைச் சிறிதளவு மகிழ்ச்சிப்படுத்த எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு ஐபிஎல் மட்டும்தான்'' எனத் தெரிவித்தார்.

தற்போது ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், மார்க்ஸ் ஸ்டாய்னிஷ், கம்மின்ஸ், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட 14 வீரர்கள் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x