Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM
டி20 போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்தவர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் படைத்த நாள் ஏப்ரல் 23. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு எதிராக 30 பந்துகளில் அவர் இந்த சாதனையை படைத்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில், வேறு எந்த வீரரும் செய்யாத அளவுக்கு பேட்டிங்கில் சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர் கிரிஸ் கெயில் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதற்கெல்லாம் சிகரம் வைத்ததைப் போன்று 2013-ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விஸ்வரூபம் எடுத்தார் கிறிஸ் கெயில்.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், புனே வாரியர்ஸ் அணிக்கும் இடையிலான இந்த டி20 போட்டி, பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. அன்றைய தினம் பெய்த மழையின் காரணமாக போட்டி சற்று தாமதமாகத் தொடங்கியது. ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய, பந்துவீச்சாளர்கள் மீது கொஞ்சமும் கருணை காட்டாமல் அனைத்துப் பந்துகளையும் துவம்சம் செய்தார் கிறிஸ் கெயில்.
முதல் 30 பந்துகளிலேயே சதத்தை எடுத்து சாதனை படைத்தவர், அதன் பிறகும் தன் ருத்ர தாண்டவத்தை நிறுத்தவில்லை. கடைசிவரை அதிரடி காட்டிய அவர் 175 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரே போட்டியில் பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
கிறிஸ் கெயிலின் அதிரடியால், அன்றைய தினம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய புனே வாரியர்ஸ் அணியால், 133 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. தன்னுடைய பேட்டிங்கால் புனே வாரியர்ஸை வதைத்த கெயில், பந்துவீச்சிலும் 2 விக்கெட்களை வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT