Published : 22 Apr 2021 01:28 PM
Last Updated : 22 Apr 2021 01:28 PM

தோனியோடு ஒப்பிட முடியாது; டி20 அணிக்கு மோர்கன் சிறந்த கேப்டன் இல்லை: சேவாக் அதிரடி கருத்து

சிஎஸ்கே கேப்டன் தோனி, கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் | படம் உதவி: ட்விட்டர்.

மும்பை

சிஎஸ்கே கேப்டன் தோனியோடு, கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனை ஒப்பிட முடியாது. என்னைப் பொறுத்தவரை டி20 போட்டிக்கு சிறந்த கேப்டனாக மோர்கன் இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ந்து 3-வது தோல்வியை மோர்கன் தலைையில் கொல்கத்தா அணி சந்தித்துள்ளது.

பவர்ப்ளே ஓவருக்குள் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரஸல், தினேஷ் கார்த்திக், கம்மின்ஸ் மூவரும் சேர்ந்து ஆட்டத்தை கடைசி வரை இழுத்து வந்தனர்.

கொல்கத்தா அணயின் கேப்டன் மோர்கன் இதுவரை 4 ஆட்டங்களிலும் பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை, கேப்டன்ஷிப்பும் சரியில்லை. இது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

வீரேந்திர சேவாக்

''உலக அளவில் டி20 போட்களுக்கு சிறந்த கேப்டன் மோர்கனாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஒருநாள் போட்டிகளுக்கு வேண்டுமானால் மோர்கன் சிறந்த கேப்டனாக இருக்கலாம். இங்கிலாந்து அணி உண்மையில் வலிமையான அணி. எந்த வீரர் பேட்டிங் செய்தாலும், பந்து வீசினாலும் அவருக்காக வென்று கொடுப்பார்கள்.

ஆனால், ஐபிஎல் தொடரில் அதுபோன்று நடக்காது. இங்கிலாந்து அணியைப் போல் ஐபிஎல் அணியும் இல்லை. ஆதலால், டி20 போட்டிகளுக்கு சிறந்த கேப்டன் மோர்கன் என்று நான் நினைக்கவில்லை. தோனியுடன், மோர்கனை ஒப்பிட்டாலும் அது சரியான ஒப்பீடாக இருக்காது. அவ்வாறு ஒப்பிடவும் கூடாது.

இங்கிலாந்து அணி அமைந்ததுபோல், மோர்கனுக்கு கொல்கத்தா அணி அமையவில்லை. ஒரு கேப்டனாக இருப்பவர் அணிக்கும் சிறந்தவராக நடக்க வேண்டும். ஒருவேளை மோர்கன் அடுத்த ஆண்டும் கேப்டனாக கொல்கத்தா அணிக்குத் தொடர்ந்தால் சிறந்த அணி அமையக்கூடும். வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடக்கூடும்.

இரு வீரர்கள் சிறப்பாக பேட் செய்து, இரு வீரர்கள் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினாலே, அது சிறந்த அணியாக மாறிவிடும். தொடர்ந்து போட்டிகளை வெல்லத் தொடங்கிவிடுவார்கள். ஆதலால், டி20 அணிக்கு சிறந்த கேப்டன் மோர்கன் என்று நான் நினைக்கவில்லை''.

இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x