Published : 22 Apr 2021 03:13 AM
Last Updated : 22 Apr 2021 03:13 AM
நம் நாட்டில் எப்படி கிரிக்கெட், மிக முக்கியமான விளையாட்டாக இருக்கிறதோ, அதேபோல் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இருக்கும் விளையாட்டு பேஸ்பால். கிரிக்கெட்டுக்கும் பேஸ் பாலுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டிலும் பேட்டை வைத்துதான் வீரர்கள் பந்தை அடிக்கிறார்கள். இரண்டிலும் ஒரு அணி பேட்டிங் செய்ய, மற்றொரு அணி பீல்டிங் செய்யும். கிரிக்கெட்டில் பந்தை அடித்த பிறகு பேட்ஸ்மேன்கள் ரன் எடுப்பதற்காக ஓடுவதைப்போல், பேஸ்பாலிலும் பேட்ஸ்மேன்கள் ரன்களை எடுக்க ஓடுவார்கள்.
இரண்டு ஆட்டங்களுக்கும் இடையே சில வித்தியாசங்கள் மட்டும் உள்ளன. அதில் முக்கியமான வித்தியாசம், இரு விளையாட்டுகளிலும் வேறு வேறு வகையான பேட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பது. கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பேட்களைப்போல் அல்லாது, பேஸ்பாலில் பயன்படுத்தப்படும் பேட்கள் உருண்டையாக இருக்கும். கிரிக்கெட்டில் வீரர்கள் இரு முனைகளுக்கு இடையே ஓடினால், பேஸ்பாலில் வீரர்கள் 4 முனைகளுக்கு இடையே ஓடுவார்கள். இப்போட்டியில் பேட்டிங் செய்யும் வீரர்கள் பந்தை அடித்துவிட்டு மைதானத்தின் 4 முனைகளுக்கு இடையே ரன்களை எடுக்க ஓடுவார்கள். அதேநேரத்தில் பீல்டிங் செய்யும் அணியில் இருப்பவர்கள் அந்தப் பந்தை பிடித்து எதிரணியினர் ரன் ஓடவிடாமல் தடுப்பார்கள். 9 இன்னிங்ஸ்களின் இறுதியில் அதிக ரன்களைக் குவிக்கும் அணி, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இப்படி கிரிக்கெட்டுக்கு நெருக்கமான பேஸ்பால் தோன்றியது அமெரிக்காவிலா அல்லது இங்கிலாந்திலா என்ற பெரிய விவாதம் இன்றும் நடைபெற்று வருகிறது. வட அமெரிக்காவில் 18-ம் நூற்றாண்டில் இவ்விளையாட்டு அறிமுகமானதாக சிலர் கூற, 1749-ம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள சுர்ரே நகரில் இவ்விளையாட்டு அதிகாரப்பூர்வமாக நடத்தப்பட்டதாக சில வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. மேலும் அப்போதைய வேல்ஸ் இளவரசர் அன்றைய தினம் நடந்த போட்டியில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT