Published : 20 Apr 2021 04:30 PM
Last Updated : 20 Apr 2021 04:30 PM

சிஎஸ்கே அணிக்கு ரவிந்திர ஜடேஜாவை கேப்டனாக நியமிக்கலாம்; தோனி நீண்டகாலம் விளையாடமாட்டார்: மீண்டும் வம்பிழுக்கும் மைக்கேல் வான் 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனிக்கு அடுத்து, ரவிந்திர ஜடேஜாவை நியமிக்கலாம். அதற்காக இப்போதிருந்தே அணியை அவரைச் சுற்றிக் கட்டமைக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கருத்து தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு தற்போது கேப்டனாக இருக்கும் தோனி ஏற்கெனவே சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார், 40 வயதாகிவிட்டது. இனிமேல் சிஎஸ்கே அணிக்கு அவரால் எத்தனை சீசன்களுக்கு விளையாட முடியும், கேப்டனாக இருக்க முடியும் என்பது பெரிய கேள்விக்குறி. ஒருவேளை இந்த சீசனோடு லீக் போட்டிகளுக்கும் தோனி முழுக்குப் போடப்போகிறாரா என்பதும் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஏனென்றால், உடல் அளவில் தோனி தன்னை ஃபிட்னஸாக வைத்திருந்தாலும், பேட்டிங்கில் படுமோசமாகச் செயல்படுகிறார். டி20 போட்டியில் விளையாடக் களமிறங்கினால் டெஸ்ட் போட்டி போன்று தோனி விளையாடுகிறார். தோனியால், ஷாட்களைச் சரியாகத் தேர்வு செய்ய முடியவில்லை. தோனி அடிப்பதற்கு ஏற்ப ஷாட்களும் மீட் ஆவதில்லை.

இந்நிலையில், ''சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனிக்குப் பின் மற்றொரு வீரரை நியமித்தே ஆக வேண்டும், அணியை நல்ல வீரரிடம் ஒப்படைக் வேண்டும். அந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு அடுத்த கேப்டனாக ரவிந்திர ஜடேஜாவை நியமிக்கலாம்'' என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தொடரிலிருந்து மைக்கேல் வான் சர்ச்சைக்குரிய வகையில் இந்திய அணியைப் பற்றியும், ஆடுகளம் குறித்தும் கருத்து தெரிவித்து வந்தார். சமூக வலைதளங்களில் மைக்கேல் வானுக்கு கடும் கண்டனம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இப்போது நன்றாகச் செயல்பட்டுவரும் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வான் கருத்து தெரிவித்துள்ளார்

மைக்கேல் வான் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''சிஎஸ்கே கேப்டன் தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என யாருக்கும் தெரியாது. இன்னும் 3 ஆண்டுகள் கூட விளையாடலாம், இந்த சீசனோடு முடிக்கலாம். ஆனால், அதன் பிறகு கேப்டனாக யாரைத் தேர்வு செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

என்னைப் பொறுத்தவரை சிஎஸ்கே அணியில் ஆல்ரவுண்டராக இருக்கும் ரவிந்திர ஜடேஜாவை தோனிக்கு பதிலாக கேப்டனாக நியமிக்கலாம். ஆதலால், இப்போது இருந்தே ரவிந்திர ஜடேஜாவைச் சுற்றி அணியைக் கட்டமைக்க வேண்டும். தோனி அதற்குத் தயாராக வேண்டும். ஜடேஜாவைச் சுற்றி அணியை உருவாக்க வேண்டும்.

ரவிந்திர ஜடேஜா சிறந்த வீரர். பந்துவீச்சிலும், ஃபீல்டிங்கிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர், மனரீதியாகவும் ஆரோக்கியமான சி்ந்தனை உடையவர்.

ஜடேஜாவால் அணியில் எந்த இடத்திலும் இறங்கி பேட் செய்ய முடியும். 4-வது இடம், 5-வது இடம் என எந்த இடத்தில் தேவைப்பட்டாலும் களமிறங்குவார். எதிரணியின் சூழலைப் பொறுத்து நன்றாகப் பந்துவீசக்கூடியவர், முதல் ஓவரே வீச வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் ஜடேஜா சிறப்பாகப் பந்துவீசுவார். ஆதலால், சிறந்த கிரிக்கெட் வீரரான ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்புக்குத் தகுதியானவர்''.

இவ்வாறு மைக்கேல் வான் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x