Last Updated : 19 Apr, 2021 06:36 AM

 

Published : 19 Apr 2021 06:36 AM
Last Updated : 19 Apr 2021 06:36 AM

தவண் தாண்டவம்: சேஸிங்ஸில் கில்லியான டெல்லி கேபிடல்ஸ்: ராகுல், அகர்வால் ஆட்டம் வீண்: பஞ்சாப் பந்துவீச்சு படுமோசம்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஷிகர் தவண் | படம் உதவி ட்விட்டர்

மும்பை


ஷிகர் தவணின் அதிரடியான ஆட்டத்தால், மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 11-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் சேர்த்தது. 196 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 10 பந்துகள் மீதம் இருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. தற்போது 3 ஆட்டங்களில் 2 வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 3 ஆட்டங்களில் 2 தோல்வி ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.

'கப்பார் சிங்' ஷிகர் தவணின் 2-வது அபாரமான ஆட்டம். டெல்லி சேஸிங் முழுவதிலும் நீக்கமற தவணின் ஆட்டம்தான் நிறைந்திருக்கிறது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவண் 49 பந்துகளில் 92 ரன்கள்(13பவுண்டரி, 2சிக்ஸர்) சேர்த்து ஆட்டநாயகன் விருதை வென்றார். சிஎஸ்கே அணிக்கு எதிராகவும் இதேபோல சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார், இந்த முறையும் அவசரப்பட்டுவிட்டார்.

டெல்லி அணியைப் பொருத்தவரை பிரித்வி ஷா, ஷிகர் தவண் இருவரும் முதல் விக்கெட்டுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது பெரிய சுமைையக் குறைந்தது. பவர்ப்ளே முடிவுதற்குள் பிரித்விஷா ஆட்டமிழந்தாலும் ஸ்கோர் 59 ரன்களை எட்டியது.

அடுத்து வந்த ஸ்மித், ரிஷப்பந்த் ஆகியோர் சுமாராக ஆடினாலும், அணி்யை வெற்றியின் அருகே வரை அணிைய கொண்டுவந்து, ஷிகர் தவண் புறப்பட்டார்.

டெல்லி அணியின் பேட்டிங் முழுவதிலும் தவண் முழுமையாக நிறைந்திருந்தார். இது டெல்லி அணிக்கான வெற்றி என்பதைவிட தவணுக்கான வெற்றியாகவே பார்க்கப்பட வேண்டும்.

பந்துவீச்சில் இரு அணிகளின் வீரர்களும் சுமார்தான். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஒத்துழைந்ததால், பந்துவீச்சாளர்கள் நொந்து போனார்கள். டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரபாடா, வோக்ஸ், மெரிவாலா ஆகியோர் 10 ரன்ரேட்டில் வாரி வழங்கினர்,ஆவேஷ் கான்,அஸ்வின் மட்டுமே சுமாராகப் பந்துவீசினர்.

கேஎல் ராகுலுக்கு நேற்று கேட்ச் பிடிக்க 3 வாய்ப்புகள் டெல்லி அணிக்கு கிடைத்து அதை கோட்டைவிட்டனர். ராகுல் 9, 42 மற்றும 50 ரன்கள் சேர்த்திருந்தபோது அளிக்கப்பட்ட கேட்ச் வாய்ப்பை ஸ்மித், பிரித்வி ஷா, ஸ்டாய்னிஷ் மூவரும் நழுவவிட்டனர். தொடக்கத்திலேயே ஸ்மித் கேட்ச் பிடித்திருந்தால் ஆட்டம் வேறுமாதிரியாக இருந்திருக்கும்.

பஞ்சாப் அணியைப் பொருத்தவரை ராகுல், அகர்வால் கூட்டணி டெல்லி பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை அளித்தனர். அதன்பின் வந்த கெயில், பூரன் ஏமாற்றினாலும், ஓரளவுக்கு சவாலான ஸ்கோரையே அடித்தனர்.

ஆனால், ஏறக்குறைய 200 ரன்களை தொடும் இந்த ஸ்கோரை அடித்து அதை டிபென்ட் செய்ய முடியவில்லை என்பது வேதனையாகும்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சு டெல்லி அணியைவிட மோசமாக இருந்தது. இயல்பாகவே சிறப்பாகப் பந்துவீசும் முகமது ஷமி நேற்று 53 ரன்களை வாரி வழங்கினார். ஜை ரிச்சார்ட்ஸன், மெரிடித் இருவரையும் கோடிக்கணக்கில் வாங்கியும், இதுவரை நடந்த ஆட்டங்களில் பெரிதாக பந்துவீச்சில் எதிரணியை நெருக்கடியில் தள்ளியது போல் தெரியவில்லை. டெத் பவுலிங்கில் ஜோர்டன் நன்றாக வீசக்கூடியவர், அவரை அடுத்த போட்டிக்கு களமிறங்கலாம்.

195 ரன்களை அடித்துக்கொண்டு அதை டிபென்ட் செய்ய பஞ்சாப் அணியால் முடியாவிட்டால் அது நிச்சயம், பந்துவீச்சாளர்களின் பலவீனமாகத்தான் இருக்க முடியும். பிரித்வி ஷா, தவண் இருவருக்கும் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் எந்தவிதமான சிரமத்தையும் அளிக்கவி்ல்லை, திட்டமிடல் இல்லாமல் களமிறங்கினார்களா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களால் ஏற்பட்ட தோல்வி, இந்த போட்டி பந்துவீச்சாளர்களால் ஏற்பட்ட தோல்வியாக முடிந்தது.

195 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி அணிக்கு பிரித்வி ஷா, தவண் ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரின் தொடக்கமே அதிரடியாகத்தான் இருந்தது. அதிலும் பிரித்வி ஷா சிக்ஸர், பவுண்டரி என விளாசினார்,வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தவணும் பவுண்டரியை பறக்கவிட்டார். 4.5ஓவர்களில் 50 ரன்களை எட்டியது டெல்லி அணி.

பிரித்வி ஷா 32 ரன்கள் சேர்த்த நிலையில் அர்ஸ்தீப் சிங் ஓவரில் விக்கெட்டை இழந்தார். முதல் விக்ெகட்டுக்கு இருவரும் 59 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளேயில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்தது. ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கியதால், பெரிய எதிர்பார்ப்பு இருந்ததது. ஆனால், தவணுக்கு ஒத்துழைத்து ஸ்மித் ஆடினார் அவர் பெரிதாக ரன் ஏதும் சேர்க்கவில்லை. தவண், 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

காற்றில்லாத பலூன்போலானது. ஸ்மித் பேட்டிங். ஸ்மித் 9 ரன்னில் மெரிடித் பந்துவீச்சில் வெளியேறினார். ஸ்மித்தை ஏன் ராஜஸ்தான் அணி கழற்றிவிட்டனர் என்பதற்கு அர்த்தமும் புரிந்தது.

அடுத்து வந்த ரிஷப் பந்த் களமிறங்கி, தவணுடன் சேர்ந்தார். தவண் முரட்டுத்தனமாக ஃபார்மில் இருப்பதைப் புரிந்து கொண்ட் பந்த், தவணுக்கு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொடுத்தார். தவணும் பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் பொளந்துகட்டினார்.

சதத்தை நெருங்கிய தவண் 92 ரன்கள் சேர்த்திருந்த போது ரிச்சார்டஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஸ்டாஸ்னிஷ், பந்த்துடன் சேர்ந்தார். நிதானமாக ஆடிய ரிஷப்பந்த் 15 ரன்னில் ரிச்சார்ட்ஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஸ்டாய்னிஷ், லலித் யாதவ் இருவரும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஸ்டாய்னிஷ் 27 ரன்களுடனும், நிகில்12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 18.2 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்தது. மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் அபாரமான தொடக்கத்தை அளித்தனர். மீண்டும் அகர்வால், முரட்டுத்தனமான ஃபார்முக்கு திரும்பினார்.

கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரில் 5 ரன்கள் அளித்த நிலையில் 2-வது ஓவரை ராகுலும், அகர்வாலும் நொறுக்கி அள்ளியதில் 20 ரன்களை வழங்கினார். அறிமுக வீரர் லூக்மேன் மெரிவாலா பந்துவீச்சை அகர்வாலும், ராகுலும் கிழித்தனர். 3 பவுண்டரி, ஒருசிக்ஸர் என தொடக்கத்திலிருந்தே ரன்ரேட்டை ராக்கெட் வேகத்தில் சென்றது. பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி.

அதிரடியாக ஆடிய அகர்வால் 25 பந்துகளில் அரைசதம் அடித்து 36 பந்துகளில் 69 ரன்களில்(4சிக்ஸர், 7பவுண்டரி) மெரிடித் பந்துவீச்சில் வி்க்கெட்டை இழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 122ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். நிதானமாக ஆடிய ராகுல் 45 பந்துகளில் அரைசதம் அடித்து, 61 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ராகுல் கணக்கில் 2 சிக்ஸர் 7 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்துவந்த கெயில்(11) பூரன்(9) என ஏமாற்றினர். தீபக் ஹூடா, ஷாருக்கான் ஜோடி இறுதிவரை ஆட்டத்தை எடுத்துச் சென்றனர். ஹூடா 22 ரன்னிலும், ஷாருக்கான் 15 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 195 ரன்கள் சேர்த்தது. டெல்லி தரப்பில் மெரிவாலா, வோக்ஸ், ரபாடா, ஆவேஷ்கான் தலா ஒரு விக்ெகட்டை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x