டி-20 உலகக்கோப்பைக்கான இடங்கள் தேர்வு?- பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்கப்படும்: பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா | கோப்புப்படம்
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா | கோப்புப்படம்
Updated on
1 min read

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக்கும் உலகக் கோப்பை டி-20 போட்டிக்காக இந்தியா வரும் பாகிஸ்தான் அணிக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் விசா வழங்கப்படும், மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

டி-20 உலகக் கோப்பைப் போட்டிகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்குகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. 45 போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த உலகக்கோப்பை டி-20 போட்டி குறித்து ஆலோசிக்க பிசிசிஐ உயர்மட்டக் குழு நேற்று காணொலி மூலம் கூடியது. இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து பிசிசிஐ முக்கிய அதிகாரி கூறுகையில் “ உலகக் கோப்பை டி-20 போட்டியை நடத்தும் இடங்கள் குறித்து பிசிசிஐ உயர்மட்டக்குழுவில் விவாதிக்கப்பட்டது.

சிசிஐ செயலாளர் ஜெய் ஷா, 9 இடங்களில் போட்டியை நடத்தலாம் என ஆலோசனை தெரிவித்தார். இறுதிப்போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதுதவிர டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், தரம்சாலா, லக்னோ ஆகிய இடங்களில் போட்டியை நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது.

உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க கேப்டன் பாபர் ஆஸம் தலைமையில் வரும் பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்கும் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும். இது தொடர்பாக மத்திய அரசுடன் பிசிசிஐ பேசியுள்ளதால், பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் சிக்கல் இருக்காது. ஆனால், அந்நாட்டு ரசிகர்கள் இந்தியாவுக்கு வந்து போட்டியைக் காண்பது குறித்து முடிவு ஏதும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும். பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது என ஐசிசியிடம் பிசிசிஐ தெரிவித்துள்ளது” என அந்த அதிகாரி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in