Last Updated : 16 Apr, 2021 04:19 PM

 

Published : 16 Apr 2021 04:19 PM
Last Updated : 16 Apr 2021 04:19 PM

ஒரு ரன் ஓட மறுத்த விவகாரம்: மோரிஸ் 4 சிக்ஸர் அடித்தாலும், ஃபினிஷராக இருந்தாலும் தன் செயலை நியாயப்படுத்தும் சாம்ஸன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன் | படம் உதவி: ட்விட்டர்.

மும்பை

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஒரு ரன் ஓடி கிறிஸ் மோரிஸுக்கு ஸ்ட்ரைக்கை வழங்காத விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் டி20 தொடரில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்தது. இதில் 222 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துரத்தியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

அர்ஸ்தீப் சிங் பந்துவீசினார். களத்தில் மோரிஸ், சாம்ஸன் இருந்தனர். முதல் பந்தில் சாம்ஸன் ரன் ஏதும் எடுக்கவில்லை. 2-வதாக வந்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் மோரிஸ் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தில் சாம்ஸன் ஒரு சிக்ஸர் விளாசினார். வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 2 பந்துகள் இருந்தன.

இதில் 5-வது பந்தில் சாம்ஸன் தட்டிவிட, ரன்னுக்காக மோரிஸ் சாம்ஸன் ஓடி வந்தார். ஆனால், சாம்ஸன் ஓட மறுத்து, மோரிஸைத் திருப்பி அனுப்பினார். கடைசிப் பந்தில் சாம்ஸன் பந்தை சிக்ஸருக்கு விளாச, டீப் கவர் திசையில் தீபக் ஹூடா கேட்ச் பிடித்தார்.

இதனால், மோரிஸ் சிறந்த ஆல்ரவுண்டர். அவருக்கு ஏன் ஸ்ட்ரைக்கை சாம்ஸன் கொடுக்கவில்லை, சிக்ஸர் விளாசும் திறமையில்லையா, ஓடிவந்த ஒருவரை ஏன் திருப்பி அனுப்பினார் என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன.

ஆனால், நேற்று டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா வீசிய 19 ஓவரில் 2 சிக்ஸர்களையும், டாம் கரன் வீசிய 20 ஓவரில் 2 சிக்ஸர்களையும் அனாயசமாக விளாசி மோரிஸ் வெற்றியைத் தேடித் தந்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்பதற்காக மோரிஸுக்கு ஸ்ட்ரைக்கை வழங்காமல் சாம்ஸன் மறுத்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 4 சிக்ஸர்களை விளாசி தன்னால் சிக்ஸர்களை விளாச முடியும் என மோரிஸ் பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில் ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸனிடம் ஒரு ரன் ஓட மறுத்த விவகாரம் குறித்தும், அந்த முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “எப்போதுமே நான் விளையாடிய ஆட்டத்தை அமர்ந்து மறு ஆய்வு செய்தேன். ஆனால், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் 100 முறை மீண்டும் நடந்தாலும் நான் கடைசிப் பந்திற்கு முதல் பந்தில் சிங்கிள் ரன் ஒருபோதும் எடுக்க மாட்டேன்” எனத் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அதேசமயம், சாம்ஸன் ஒரு ரன் ஓடுவதற்கு மறுத்தது குறித்து மோரிஸிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ நான் ரன் ஓடி வந்துவிட்டு, சாம்ஸன் வரவில்லை என்றவுடன் திரும்பிச் சென்றது பெரிய விஷயம் இல்லை, பெரிய தியாகம் இல்லை. அந்த நேரத்தில் சஞ்சு சாம்ஸன் என்னைவிட நல்ல ஃபார்மில் இருந்தார். ஒரு கனவுபோல சஞ்சு சாம்ஸன் பேட் செய்தார். அவர் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்திருந்தால்கூட நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்.

அந்தப் போட்டியில் 222 ரன்களை சேஸிங் செய்யும் பரபரப்பான ஆட்டம், மிகப்பெரிய இலக்கு. எங்களைப் பொறுத்தவரை அது முதல் ஆட்டம். அந்த ஆட்டத்தில் தோற்றாலும், எங்களால் எந்த இடத்திலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x