Published : 14 Apr 2021 06:44 PM
Last Updated : 14 Apr 2021 06:44 PM

'இன்று உலகின் கடைசி நாள் இல்லையே'- ஷாரூக்கான் கருத்துக்கு ஆன்ட்ரூ ரஸல் பதிலடி

தினேஷ் கார்த்திக், ஆன்ட்ரூ ரஸல்: கோப்புப் படம்.

சென்னை

''உலகத்தின் கடைசி நாள் இன்று இல்லையே. ஐபிஎல் தொடரில் 2-வது போட்டியில்தான் தோற்றுள்ளோம். எங்களுக்கு இந்தத் தோல்வி பாடம். வரும் போட்டிகளில் மீண்டு வருவோம்'' என ஆன்ட்ரூ ரஸல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் நடிகர் ஷாரூக்கானின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்களில் மோசமான தோல்வியை அடைந்தது.

152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஒரு கட்டத்தில் ஏறக்குறைய வெற்றியின் அருகே இருந்தது. ஆனால், கடைசி 4 ஓவர்களில் பும்ரா, போல்ட், குர்னல் பாண்டியா ஓவர்களில் ரன் அடிக்க முடியாமல் ரஸல், தினேஷ் கார்த்திக் கோட்டை விட்டனர். கடைசி 4 ஓவர்களில் 30 ரன்களை அடிக்க முடியாமல் திணறி, 10 ரன்களில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது.

இந்தத் தோல்வி குறித்து கடுமையாக விமர்சித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் நடிகர் ஷாரூக்கான் ட்விட்டரில் கூறுகையில், ''இந்த மோசமான தோல்விக்கு குறைந்தபட்சம், ரசிகர்களிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் மன்னிப்பு கோர வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

நடிகர் ஷாரூக்கானின் கருத்துக்கு அணியின் அதிரடி வீரர் ஆன்ட்ரூ ரஸல் பதில் அளித்துள்ளார்.

போட்டி முடிந்தபின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

''நான் ஷாரூக்கானின் ட்விட்டர் கருத்தை ஆதரிக்கிறேன். ஆனால், கிரிக்கெட்டின் கடைசி நிமிடம் வரை எந்த முடிவையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம் என நினைக்கிறேன். நாங்கள் இன்னும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம். எங்கள் வீரர்களால் நான் பெருமைப்படுகிறேன்.

உங்களுக்குத் தெரியுமா, இந்தத் தோல்வியால் நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம். ஆனால், இன்று உலகத்தின் கடைசி நாள் அல்ல. ஐபிஎல் தொடரில் 2-வது போட்டியில் தோற்றுள்ளோம். இதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்குச் செல்வோம்.

கிரிக்கெட்டில் இதுபோன்ற தோல்வியும் ஒரு விளையாட்டுதான். நூற்றுக்கணக்கான டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். பல போட்டிகளில் சிறப்பாக பேட் செய்து வரும் அணி, வெற்றி பெறும் கட்டத்தில் திடீரென விக்கெட்டுகளை மடமடவென இழந்துள்ளார். புதிய பேட்ஸ்மேன்கள் செட்டில் ஆக முடியாமல் திணறி ஆட்டத்தை இழந்துள்ளார்கள். அதுபோன்ற ஆட்டம்தான் இன்று நடந்தது.

நான் முன்பு சொல்லியதைப் போல், நாங்கள் நிச்சயமாக இந்தத் தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு, மேலே வருவோம். தவறிலிருந்து கற்றுக்கொண்டுவிட்டால், நிச்சயம் மறுபடியும் தவறு செய்யமாட்டோம். நாங்கள் சிறந்த அணி. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என் சக வீரர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது''.

இவ்வாறு ரஸல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x