Last Updated : 14 Apr, 2021 05:46 PM

 

Published : 14 Apr 2021 05:46 PM
Last Updated : 14 Apr 2021 05:46 PM

ஐபிஎல் சூதாட்டத்துக்கு உடந்தை; ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனுக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை: ஐசிசி அதிரடி முடிவு

படம் உதவி | ட்விட்டர்.

துபாய்

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்துவீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக், அடுத்த 8 ஆண்டுகள் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாடவும் தடை விதித்து ஐசிசி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஐசிசி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 விதமான குற்றச்சாட்டுகளை ஹீத் ஸ்ட்ரீக் ஒப்புக் கொண்டதையடுத்து, இந்தத் தடையை ஐசிசி பிறப்பித்துள்ளது. 2029-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதிதான் சர்வதேச, உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ ஹீத் ஸ்ட்ரீக் இனிமேல் பங்கேற்க முடியும்.

ஜிம்பாப்வே அணியின் சிறந்த பந்துவீச்சாளராக ஒரு நேரத்தில் புகழப்பட்டவர் ஹீத் ஸ்ட்ரீக். 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் ஜிம்பாப்வே அணிக்குப் பயிற்சியாளராகச் செயல்பட்டபோது, ஐசிசி விதிமுறைகளுக்கு மாறாக, கையூட்டு பெறுதல், மேட்ச் பிக்ஸிங் செய்யத் தகவல்கள் பரிமாறுதல் போன்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஐசிசி விசாரணை நடத்தி வந்தது.

இதில் 5 விதமான குற்றச்சாட்டுகளைத் தான் செய்ததாக ஹீத் ஸ்ட்ரீக் ஒப்புக்கொண்டதை அடுத்து, 8 ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிசி நேர்மைக் குழுவின் பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் விடுத்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''ஹீத் ஸ்ட்ரீக் அனுபவமான முன்னாள் கிரிக்கெட் வீரர், ஜிம்பாப்வே அணியின் முன்னாள் பயிற்சியாளர். ஐசிசியின் ஏராளமான ஊழல் தடுப்புப் பயிலரங்குகளில் ஹீத் ஸ்ட்ரீக் பங்கேற்றுள்ளார். அந்த விதிமுறைகளின் சாராம்சம் என்னவென்று புரியும். கிரிக்கெட்டின் நேர்மை, நம்பகத்தன்மையைக் காக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஆனால், பல முறை கிரிக்கெட்டின் ஒழுங்கு விதிகளை ஹீத் ஸ்ட்ரீக் மீறியுள்ளார். அது தொடர்பாக விசாரணை நடந்தபோது, தடைகளை ஏற்படுத்தி அதைத் தாமதப்படுத்தியுள்ளார்.

சூதாட்டதுக்கு உதவக்கூடிய உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்பான விவரங்களை ஹீத் ஸ்ட்ரீக் பகிர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு இருக்கிறது. குறிப்பாக சில சர்வதேசப் போட்டிகள், ஐபிஎல், பிபிஎல், ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் போன்ற டி20 போட்டிகள் தொடர்பான விவரங்களை ஹீத் ஸ்ட்ரீக் பகிர்ந்துள்ளார். (2018-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஹீத் ஸ்ட்ரீக் இருந்தார்) இந்தத் தகவல்கள் எந்தப் போட்டியையும் பாதிக்கவில்லை என்றாலும், ஐசிசி விதிகளை மீறியுள்ளார்.

2-வதாக, ஐசிசி விதிகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒருவர் மீறுவதற்கும், ஊக்கப்படுத்தியும், தூண்டியும், உதவி செய்துள்ளார் ஹீத் ஸ்ட்ரீக். இதற்காக தன் சார்பாக 4 விதமான வீரர்களை அறிமுகம் செய்ய வசதி செய்துள்ளார். சூதாட்டத்துக்குத் தேவையான தகவல்களையும் வழங்கியுள்ளார்.

3-வதாக சூதாட்டத் தரகர்கள் தரும் பரிசுப் பொருட்கள், பணம், ஹோட்டல் விருந்துகள், சொகுசு விடுதிகளில் தங்குதல், ஆகியவற்றை ஐசிசி விதிகள் குறித்து தெரிந்தே பெற்றதாக ஹீத் ஸ்ட்ரீக் ஒப்புக்கொண்டார்.

4-வதாக உள்நாட்டு அணிகள், சர்வதேச அணிகள், லீக் போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் குறித்த விவரங்களைச் சேகரித்து சூதாட்டத் தரகர்களுக்குப் பரிமாறியுள்ளார்.

5-வதாக தன் மீதான விசாரணையை நடத்தப்படும்போது, ஆதாரங்களை அழிக்க முற்படுதல், ஆவணங்களை அழித்தல், தாமதப்படுத்துதல், தடை ஏற்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டதையும் ஹீத் ஸ்ட்ரீக் ஒப்புக்கொண்டார். இதையடுத்து 8 ஆண்டுகள் கிரிக்கெட் தொடர்பான எந்த விஷயங்களிலும் ஈடுபடத் தடை விதிக்கப்படுகிறது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x