Published : 14 Apr 2021 11:24 AM
Last Updated : 14 Apr 2021 11:24 AM

வெற்றிக்காகத்தான் ரஸலும், தினேஷும் விளையாடினார்களா? வெட்கப்பட வேண்டிய தோல்வி: கொல்கத்தா அணியை விளாசிய சேவாக்

தினேஷ் கார்த்திக், ஆன்ட்ரூ ரஸல் : கோப்புப்படம்

மும்பை

கொல்கத்தா நைடர் ரைடர்ஸ் அணியை வெல்ல வைக்கும் நோக்கத்தோடுதான் தினேஷ் கார்த்திக்கும், ஆன்ட்ரூ ரஸலும் களமிறங்கினார்களா என்று இருவரின் பேட்டிங் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ள வீரேந்திர சேவாக், வெட்கித் தலைகுனிய வேண்டிய தோல்வி என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 153 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் பும்ரா, போல்ட், குர்னல் பாண்டியா மூவரும் சேர்ந்து கடைசி 4 ஓவர்களில் கொல்கத்தா அணியை சேஸிங் செய்யவிடாமல் தடுத்து வெற்றி பெற்றுக் கொடுத்தனர்.

கார்த்திக்,ரஸல் களத்தி்ல் இருந்தபோது, வெற்றிக்கு 4 ஓவர்களில் 30 ரன்கள்தான் தேவைப்பட்டது. ஆனால், பும்ரா 17-வது ஓவரில் ரஸலால் பெரிஷாட் ஏதும் அடிக்கமுடியவில்லை. அதேபோ குர்னல் பாண்டியா வீசிய 18-வது ஓவரிலும் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.

மீண்டும் பும்ரா வீசிய ஓவரிலும் ரன் ஏதும் சேர்க்க முடியாமல் தினேஷ்கார்த்திக், ரஸல் திணறினர். போல்ட் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் ரஸல், கம்மின்ஸ் விக்கெட்டை இழந்தனர். ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தப் போட்டியில் 36 ஓவர்கள் வரை ஆட்டம் கொல்கத்தா அணியின் பக்கம்தான் இருந்தது, கடைசி 4 ஓவர்களில் இழுத்துப்பிடித்த மும்பை அணி வெற்றியை வசமாக்கியது. கைமேல் கிடைத்த வெற்றி, ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட வெற்றியை கொல்கத்தா அணி தரைவார்த்தது.

இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக், ஆன்ட்ரூ ரஸல் ஆகியோரின் பேட்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான், “இந்த தோல்விக்கு கொல்கத்தா அணி ரசிகர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் பேசுகையில், ரஸலும், தினேஷும் முதல் போட்டியில் வெற்றி மனநிலையுடன் விளையாடினார்களோ அதேபோலத்தான் விளையாடினார்கள் என்றார்.

ஆனால்,தினேஷ் கார்த்திஸ், ரஸல் பேட் செய்தவிதம் அவ்வாறு இல்லை. அவர்கள் போட்டியை கடைசிவரை கொண்டு சென்று, அதன்பின் வெற்றி பெறவைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள் என நினைக்கிறேன். ஆனால், அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.

ஆனால், சகிப் அல்ஹசன், மோர்கன், கில், ராணா ஆகியோர் நேர்மறையான எண்ணத்துடன், உள்நோக்கத்துடன்தான் பேட் செய்தனர். இவர்கள் இருவரும் அவ்வாறு செய்தார்களா

தொடக்க வீரர் நிதிஷ் ராணா, கில் இருவரில் ஒருவர் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுத்திருக்க வேண்டும். நல்ல தொடக்கத்தை அளித்துவிட்டு, 152 ரன்களை அடிக்க முடியாமல், என்ன நடக்கிறது என்று வேடிக்கைபார்த்தார்கள்.

ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் நிலையில் இருந்த கொல்கத்தா அணி போனால் போகட்டும் என ரீதியில் போட்டியை இழந்துள்ளது. ரஸல் பேட் செய்ய வேந்தபோது வெற்றிக்கு 27 பந்துகளில் 30 ரன்கள் மட்டும்தான் தேவை. தினேஷ் கார்த்திக் கடைசிவரை பேட் செய்தும் வெற்றி பெற வைக்க முடியவில்லை. இது வெட்கித் தலைகுனியவேண்டிய தோல்வி .

கடைசி இரு ஓவர்களில் பெரிய அளவுக்கு பந்துகளுக்கும், ரன்களுக்கும் வேறுபாடு இல்லை. வெல்ல வேண்டிய போட்டிையை எவ்வாறு இழந்தார்கள் என்று பார்த்தோம். கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்கும்போது, 36 ரன்களை 6 ஓவர்களில் எளிதாக அடைந்துவிடலாம், சிரமப்படத் தேவையில்லை.

இதுபோன்ற நேரத்தில் போட்டியை ஜவ்வாக இழுக்கக்கூடாது, மாறாக, அதிரடியாக சில ஷாட்களை ஆடி போட்டியை முடிக்க வேண்டும். ஆனால் கொல்கத்தா அணி தனது நிகரரன்ரேட்டைகூட தக்கவைக்க முடியவில்லை.

இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x