Last Updated : 13 Apr, 2021 12:38 PM

 

Published : 13 Apr 2021 12:38 PM
Last Updated : 13 Apr 2021 12:38 PM

கடைசிப் பந்தில் ஜெயிப்பது எங்களுக்குப் பழகிவிட்டது: கே.எல்.ராகுல்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் | படம் உதவி: ட்விட்டர்.

மும்பை

கடைசிப் பந்தில் வெற்றி பெறுவதும், கடைசி வரை போராடுவதும் எங்களுக்குப் பழகிவிட்டது. ஒற்றுமையாக இருந்து வெற்றி பெற்றது மகிழ்ச்சி என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்தார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்களை ராஜஸ்தான் அணி சேஸிங் செய்துவிடுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாம்ஸனின் ஆட்டம், பஞ்சாப் வீரர்களின் கனவைக் கலைத்தது.

ஆனால், கடைசி நேரத்தில் முகமது ஷமி, மெரிடித் வீசிய இரு ஓவர்கள் ராஜஸ்தானுக்கு நெருக்கடியை அதிகப்படுத்தியது. கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அர்ஸ்தீப் சிங் கட்டுக்கோப்பாக பந்துவீசி மிரட்டல் ஃபார்மில் இருந்த சாம்ஸனைத் திணறவிட்டார். கடைசிப் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற சாம்ஸன் பவுண்டரி அருகே தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

19.5 ஓவர்கள் வரை பஞ்சாப் கிங்ஸ் அணியினர் வெற்றி தங்களுக்குச் சொந்தமில்லை என்றுதான் நினைத்திருக்க வேண்டும். ஆட்டம் கத்தி மீது நடப்பதுபோல்தான் இருந்தது. கடைசிப் பந்துதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 19 ஓவரில் ஒரு பந்தை ஆஃப் சைடில் விலக்கி வீசியதை சாம்ஸன் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் என்பதால் மிகுந்த கவனத்துடனே அர்ஸ்தீப் ஒவ்வொரு பந்தையும் வீசினார். இந்த வெற்றி பஞ்சாப் அணிக்கு எதிர்பாராத, நம்பமுடியாத வெற்றியாகத்தான் இருந்தது.

வெற்றிக்குப் பின் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது:

“என்னால் இந்த வெற்றியை நம்பாமல் இருக்க முடியவில்லை. இரு விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்தது எனக்கு நம்பிக்கையளித்தது. சில கேட்ச்சுகளைக் கைவிட்டதால்தான் ஆட்டம் இந்த அளவு கடைசிவரை சென்றது. 12 ஓவர்கள் வரை சிறப்பாகவே பந்துவீசினோம். அதன்பின்புதான் ஆட்டம் கைவிட்டுச் சென்றது.

(சிரிக்கிறார்) இதுபோன்று கடைசி நேரம் வரை போராடுவது, கடைசிப் பந்தில் வெற்றி பெறுவது என்பது எங்களுக்குப் புதிதானது அல்ல. ஆனால், ஒற்றுமையாக இருந்ததால் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. நாங்கள் சிறப்பாக பேட் செய்தோம், பந்துவீச்சும் நன்றாக இருந்தது.

ஆனால் லென்த்தில் தொடர்ந்து சரியாக வீசவில்லை. பந்துவீச்சாளர்கள் வரும் போட்டிகளில் கற்றுக்கொள்வார்கள். திறமையான, ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்குப் பின்னால் நாங்கள் இருக்கிறோம்.

ஹூடாவின் இன்னிங்ஸ் அற்புதமாக இருந்தது. அச்சமில்லாமல் பேட் செய்தது பார்க்கவே அழகாக இருந்தது. இதைத்தான் ஐபிஎல் தொடரில் எதிர்பார்க்கிறோம். கெயில், ஹூடா இருவரும் சிறப்பாக பேட் செய்தார்கள்.

எப்போதுமே இக்கட்டான நேரத்தில் அர்ஸ்தீப் சிங்கைத்தான் நான் தேடுவேன். அவரும் இதுபோன்ற நெருக்கடியான, சவாலான சூழலைத்தான் விரும்புவார். அதனால் அழுத்தமான நேரத்தில் அவரிடம் பந்தை வீசிவிடுவேன். அர்ஸ்தீப் சிங்கிற்கு அவரின் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. அவரை நம்புகிறார். ஆதலால், சிறப்பாகப் பந்துவீசுகிறார்”.

இவ்வாறு கே.எல். ராகுல் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x