Last Updated : 13 Apr, 2021 03:11 AM

 

Published : 13 Apr 2021 03:11 AM
Last Updated : 13 Apr 2021 03:11 AM

விளையாட்டாய் சில கதைகள்: செஸ் ராஜா கேரி காஸ்பரோவ்

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்துக்கு முன்பு, செஸ் உலகில் கொடிகட்டிப் பறந்தவரான ரஷ்ய வீரர் கேரி காஸ்பரோவின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 13). இன்றைய தினம் அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:

அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற ஊரில் 1963-ம் ஆண்டு கேரி காஸ்பரோவ் பிறந்தார். சிறு வயதில் தனது பெற்றோர் சதுரங்க விளையாட்டில் ஈடுபடும்போது அதை வேடிக்கை பார்ப்பது காஸ்பரோவின் வழக்கம். அப்போது அவர்கள் சிக்கலான சூழ்நிலையில் இருக்கும்போது காஸ்பரோவ் ஆலோசனைகளைக் கூறுவாராம். இதைப் பார்த்த காஸ்பரோவின் பெற்றோர், அவர் மிகச்சிறந்த செஸ் வீரராக வருவார் என்று கணித்து, அருகில் உள்ள செஸ் அகாடமியில் சேர்த்துள்ளனர். 7 வயதில் தந்தை இறந்த பிறகு, தாயாரின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார் கேரி காஸ்பரோவ். 1976-ம் ஆண்டில் நடந்த சோவியத் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோவ், பிறகு உள்ளூரில் புகழ்பெற்ற செஸ் வீரரான அலெக்ஸாண்டர் ஷகாரோவிடம் பயிற்சி பெற்றுள்ளார். 1984-ம் ஆண்டில் 2,710 புள்ளிகளுடன் உலக செஸ் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 1985-ம் ஆண்டுமுதல் பலமுறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

செஸ் விளையாட்டு மட்டுமின்றி, அரசியலிலும் காஸ்பரோவ் கவனம் செலுத்தினார். 1984-ம் ஆண்டு சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த காஸ்பரோவ், 1987-ல் அதன் மத்திய கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1990-ல் அக்கட்சியில் இருந்து விலகினார்.

சர்வதேச செஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்ட காஸ்பரோவ், 2005-ல் அந்நாட்டு அதிபர் புடினுக்கு எதிராக யுனைடட் சிவில் பிரண்ட் என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால் செஸ் விளையாட்டில் சாதித்த அவரால், அரசியலில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. 2007-ல் ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த காஸ்பரோவ், பின்னர் அதிலிருந்து பின்வாங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x