Published : 12 Apr 2021 02:14 PM
Last Updated : 12 Apr 2021 02:14 PM

ஃபினிஷிங் முக்கியம், களத்தில் நிற்பதால் பயனில்லை: மணிஷ் பாண்டேவை விமர்சித்த வீரேந்திர சேவாக் 

மணிஷ் பாண்டே |படம் உதவி ட்விட்டர்

சென்னை


பவர் ஹிட்டர்ஸ் அணியில் இல்லாவிட்டால், கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணி தோற்றதுபோன்றுதான் இந்த ஆண்டும் ஏற்படும். தேவைக்கு ஏற்றார்போல் மணிஷ் பாண்டே அடித்து ஆடாததுதான் தோல்விக்கு காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்றது.

188 ரன்களை இலக்கைத் துரத்திச் சென்ற சன்ரைசர்ஸ் அணி ஒருகட்டத்தில் வெற்றி பெறும் வாய்ப்பில் இருந்தது. கடைசி 2 ஓவர்களுக்கு 38 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்துல் சமத் 2 சிக்ஸர்களை கம்மின்ஸ் பந்துவீச்சில் விளாசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது, ரஸல் வீசிய கடைசி ஓவரில் மணிஷ் பாண்டே கடுமையாக முயற்சித்தும் அடிக்க முடியவில்லை. கடைசிப்பந்தில் மட்டுமே மணிஷ் பாண்டேவால் சிக்ஸர் அடிக்க முடிந்தது 10 ரன்களில் தோல்வி அடைந்தது.

41 பந்துகளில் 61 ரன்களை மணிஷ் பாண்டே சேர்த்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. கடைசி 6 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் இருந்தது, ரன்வேகத்தை மிகவும் மட்டுப்படுத்தியது.

பேர்ஸ்டோ ஆட்டமிழந்து சென்றநிலையில் மணிஷ் பாண்டே அதிரடியாக ஆடியிருக்க வேண்டும்.
மணிஷ் பாண்டே நன்றாக செட்டில் ஆகிவிட்ட நிலையில் ஏதாவது ஒரு ஓவரை குறிவைத்து விளாசி இருந்தால்,சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றிருக்கும்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மணிஷ் பாண்டே நன்றாக செட்டில் ஆகி இருந்தார், ஆனால் அவர் அடிப்பதற்கு சரியான பந்துகள் கிடைக்கவில்லை. கடைசி 3 ஓவர்களில் மணிஷ் பாண்டேவால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. கடைசி ஓவரின் கடைசிப்பந்தில் மட்டுமே மணிஷ்பாண்டே சிக்ஸர் அடித்தார் அதனால் என்ன பயன்.

மணிஷ் பாண்டே அணியில் முக்கியமான இடத்தில் விளையாடுகிறார். ஏற்கெனவே கடும் அழுத்தங்களைச் சந்தித்து,விளையாடி வரும்போது, செட்டில் ஆன பேட்ஸ்மேன் சில பவுண்டரிகளுக்கு முயற்சித்திருக்க வேண்டும். 10 ரன்களி்ல் அடைந்த தோல்வி என்பதை ஏற்க முடியாது.

இதுபோன்று சில நேரங்களில் கிரிக்கெட்டில் நடக்கும். செட்டில் ஆன பேட்ஸ்மேனால் சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து அடிக்க முடியாது. அதேபோன்றுதான் மணிஷ் பாண்டேவுக்கும் ஏற்பட்டது. அவரால் பவுண்டரியும், சிக்ஸரும் அடிக்க முடியவில்லை. சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு விளையாடும் வீரர்கள் இருப்பது அவசியம்.” எனத் தெரிவித்தார்.

இது தவிர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ பேட்டிங்கில் சூழலுக்கு தகுந்தார்போல் ஆடாமல், நீண்ட ஓவர்கள் ஆடும் பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள், அந்த பேட்ஸ்மேன்களால் நிச்சயம் அணி கஷ்டப்படும். ஹிட்டர்ஸ், அருமையான ஃபினிஷர்ஸ் இல்லாமல் இருப்பது கடினமானது. இப்படி இருந்தால், கடந்த ஆண்டு அடைந்த தோல்வியைப் போல் சந்திக்க நேரிடும். இதுபோன்ற அணிகள் எப்போதும் வெற்றிக்காக போராட வேண்டியதிருக்கும” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x