Last Updated : 11 Apr, 2021 01:01 PM

 

Published : 11 Apr 2021 01:01 PM
Last Updated : 11 Apr 2021 01:01 PM

ஹேசல்வுட் விலகியது பெரும் பின்னடைவு; லுங்கி இங்கிடி, பெஹரன்டார்ஃப் அடுத்த போட்டியிலும் இல்லை: சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் பேட்டி

சிஎஸ்கே அணியின்தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் | கோப்புப்படம்

மும்பை

ஜேஸன் பெஹரன்டார்ஃப், லங்கி இங்கிடி இருவருமே அடுத்த போட்டியிலும் விளையாடமாட்டார்கள். ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் அணியிலிருந்து விலகியது, சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்று சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.

சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் கடைசி நேரத்தில் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.இது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அணியில் முதல்தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் என்றாலே லுங்கி இங்கிடி, ஹேசல்வுட் இருவரும்தான் என்ற நிலையில் அதில் ஹேசல்வுட் இல்லாதது பெரும் குறையானது. ஆனால், அவருக்கு பதிலாக ஆஸி. வீரர் ஜேஸன் பெஹரன்டார்ஃப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் முதல்தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாததால், விக்கெட் எடுக்க முடியாமலும், ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமலும் சிஎஸ்கே திணறியது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிவந்த லுங்கி இங்கிடி பாதித் தொடரிலிருந்து ஐபிஎல் தொடருக்கு வந்துள்ளார். தற்போது தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால், அவர் அடுத்த போட்டியிலும் விளையாடமாட்டார்.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

லுங்கி இங்கிடி இன்னும் மும்பை வரவில்லை. அவர் வந்தாலும், தனிமைப்படுத்திக்க கொள்ள வேண்டும் என்பதால், அடுத்த போட்டியிலும் விளையாடமாட்டார். ஹேசல்வுட் இந்தத் தொடரில் விளையாடுவார் என எண்ணிஇருந்தோம், ஹேசல்வுட் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவுதான்.

ஹேசல்வுட்டுக்கு பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ள பெஹரன்டார்ஃப் வந்தாலும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருப்பதால், அவரும் அடுத்த ஆட்டத்தில் விளையாடமாட்டார். அதுவரை இந்தியப் பந்துவீச்சாளர்கள், சாம்கரன் ஆகியோரை வைத்துத்தான் விளையாட வேண்டும்.

ஒவ்வொரு அணியும் நடுத்தரமான இடத்தில் விளையாடுவதால், அந்த சூழலை ஏற்றுக்கொண்டு விளையாட வேண்டும். அடுத்த 4 போட்டிகளில் நாங்கள் இன்னும் அதிகமானவற்றை கற்றுக்கொள்வோம். அதேசமயம் எங்கள் அணியில் மாற்றத்தை உருவாக்க எத்தனை போட்டிகள் தேவைப்படும் என்பது குறித்து குறைத்துமதிப்பிடாதீர்கள்.

நாங்கள் எப்போதும் சென்னையை அடிப்படையாகக் கொண்ட அணிதான்.

சென்னை ஆடுகளத்தில் மும்பை அணி தடுமாறுவதைக் காண்கிறேன். சென்னை ஆடுகளத்துக்கு ஏற்ப தங்களின் யுத்தியை எவ்வாறு மாற்றுகிறார்கள் என்பது சவாலானதுதான். மும்பையில் எங்களின் யுத்தியிலும் சில மாற்றங்களைச் செய்துள்ளோம்.

மும்பை ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி, அதிகமான ரன்களை அடிக்கும் ஆடுகளம். இந்த ஆடுகளத்தில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும்.

நீண்ட இடைவெளிக்குப்பின் வந்து அரைசதம் அடித்து ஃபார்முக்கு வந்த சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் நிறைவாக இருந்தது. அற்புதமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே அணி பின்னர் மீண்டு வந்து 188 ரன்கள் சேர்த்ததே சாதகமான விஷயம்தான்

இவ்வாறு பிளெம்மிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x