Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களின் முதல் போட்டியில் ஆடவுள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்வோம்:
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கிய காலம் முதல், இதுவரை தங்கள் கேப்டனை மாற்றாத ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான். முதல் தொடரில் இருந்து இதுவரை அந்த அணியின் கேப்டனாக தோனியே நீடிக்கிறார்.
போட்டிகளின்போது எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் போட்டி விதிகளை முழுமையாக கடைபிடித்து ஆடியதற்காக அதிக முறை (6 முறை) ஃபேர் பிளே அவார்ட் வாங்கிய அணி என்ற பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உள்ளது. அத்துடன் சென்னை அணி, ஐபிஎல் தொடரில் 8 முறை இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
தங்கள் சொந்த மைதானத்தில் (சென்னை) அனைத்து போட்டிகளையும் வென்ற ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. 2011-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னையில் நடந்த அனைத்து போட்டிகளிலும் வென்று, சென்னை அணி இந்த சாதனையை படைத்துள்ளது.
ஒரே தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் சென்னை வீரருக்கே உள்ளது. 2013-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 32 விக்கெட்களை வீழ்த்தி பிராவோ இந்த சாதனையை படைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸியில் மதுபான நிறுவனம் ஒன்றின் லோகோ அச்சிடப்பட்டுள்ளது. தான் மதுபானங்களுக்கு எதிரான கொள்கை உள்ளவன் என்பதால், அந்த லோகோவை தனது ஜெர்ஸியில் அச்சிடக் கூடாது என்று மொயின் அலி, அணி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளார். அவரது உணர்வுகளுக்கு மதிப்பளித்த அணி நிர்வாகம், அவரது ஜெர்ஸியில் இருந்து மட்டும் அந்த லோகோவை நீக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT