Published : 09 Apr 2021 11:56 PM
Last Updated : 09 Apr 2021 11:56 PM

என்ன முயன்றும் ரெக்கார்டை முறியடிக்க முடியாத ரோஹித் ஷர்மா: சேப்பாக்கத்தில் உடைந்த 2 ரெக்கார்டுகள்

சென்னை

மும்பை இந்தியன்ஸ்-ஆர்சிபி இடையே இன்று நடந்த முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா தனது மோசமான ரெக்கார்டை உடைக்க முயன்று முடியாமல் போனது. அதே நேரம் சேப்பாக்கத்தில் 2 ரெக்கார்டுகள் உடைக்கப்பட்டன. முதல் போட்டியே சுவாரஸ்யமாக முடிந்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணியை முழுமையான அணி என்பார்கள். முதல் போட்டியில் எப்போதும் கோப்பையை வென்ற அணியுடன் வேறு அணி மோதும். இம்முறை கோப்பையை வென்ற அணி என்கிற முறையில் மும்பை அணியும், ஆர்சிபியும் மோதின. வலுவான அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சற்றும் குறையாத அணியாக ஆர்சிபி உள்ளது.

இந்திய அணியின் மூன்று முக்கிய இளம் பந்துவீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தர், சிராஜ், சைனி ஆகியோர் ஆர்சிபி அணியில் உள்ளனர். மேலும், ஐபிஎல் போட்டியில் முதல் 5 இடங்களில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜேமிசன், மேக்ஸ்வெல் இருவரும் ஆர்சிபி அணியில் உள்ளனர். அதிரடிக்கு டிவிலியர்ஸ், கோலியின் கேப்டன்ஷிப் என வலுவான அணியாக ஆர்சிபியும் மல்லுக்கட்டியது.

முதல் போட்டியில் நல்ல ஸ்கோருடன் மும்பை இந்தியன்ஸ் முடித்தது. ஓப்பனிங் இறக்கப்பட்ட வாஷிங்க்டன் சுந்தர் சோபிக்கவில்லை. இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் சுதாரித்துக்கொண்ட ஆர்சிபி மெல்ல மெல்ல வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து வென்றது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டப்படி மும்பை இந்தியன்ஸுக்கும், ரோகித் ஷர்மாக்கும் உள்ள ரெக்கார்டுகள் பற்றி நெட்டிசன்கள் விவாதம்தான்.

போட்டி ஆரம்பிக்கும் முன் மும்பை அணி வெல்லும், வெல்லாது என்பதற்கு இரண்டு காரணங்கள் நெட்டிசன்களால் விவாதிக்கப்பட்டன. ஒன்று இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கட்டாயம் வெல்லும் என்ற வாதத்தை நெட்டிசன்கள் முன்வைத்தனர். அதற்குச் சொன்ன காரணம் 2012 லிருந்து சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றதே இல்லை. ஹோம் கிரவுண்ட் அணி சிஎஸ்கேவால் கூட அவர்களை வெல்ல முடியவில்லை என்பதே.

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கும் எனச் சிலர் வாதமாக வைத்தார்கள். அதற்கு நெட்டிசன்கள் கூறிய காரணம், ரோஹித் ஷர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் வென்றதே இல்லை. கடைசியாக விளையாடிய 8 முதல் போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியுள்ளது. அதனால் இந்தப் போட்டியிலும் தோற்கும் என்றார்கள்.

மற்றொரு புறம் கடைசி 5 போட்டிகள் சேப்பாக்கத்தில் ஆடியதில் 5 போட்டிகளையும் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது. ஆனால், ஆர்சிபி கடைசியாக சேப்பாக்கத்தில் ஆடிய 5 போட்டிகளிலும் தோற்றுள்ளது. வரும்; ஆனா வராது என்பதுபோல் இரண்டு விதமான கருத்துகள் நெட்டிசன்களிடம் உலாவியது.

வென்றால் சேப்பாக்கத்தில் தோற்காத அணி என்கிற பெருமையுடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரெக்கார்டு தொடரும். தோற்றால் தொடர்ந்து 9-வது முறையாக முதல் போட்டியில் தோற்ற அணி என்கிற தோல்வி ரெக்கார்டு தொடரும் என்கிற நிலையில் ரோஹித் ஷர்மா என்ன முயன்றும் அவரது தோல்வி ரெக்கார்டை முறியடிக்க முடியவில்லை. முதல் போட்டியில் ரோஹித் தலைமையில் 9 வது முறையாக மும்பை இந்தியன்ஸ் தோற்கிறது. இனி அதை முறியடிக்க அடுத்த ஆண்டுவரை அவர் காத்திருக்கவேண்டும்.

இந்த மேட்சை ஆர்சிபி வென்றதன் மூலம் இரண்டு ரெக்கார்டுகள் முறியடிக்கப்பட்டுள்ளது. 2012-க்குப்பின் சேப்பாக்கத்தில் தோற்காத அணி என்கிற மும்பை இந்தியன்ஸ் அணியின் ரெக்கார்டு ஆர்சிபியிடம் தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது. சேப்பாக்கத்தில் தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்ற ஆர்சிபி இந்த வெற்றியின் மூலம் அதை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது.

எம்ஜிஆர் படத்தில் முதலில் "முக்கா முக்கா மூன்று அடி" வாங்கிட்டு அப்புறம் தான் வில்லன்களை எம்ஜிஆர் வெளுத்து கட்டுவார். எங்க மும்பையும் அப்படித்தான் இந்தமுறையும் பாருங்கன்னு மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சொல்கிறார்கள், அதுவும் சரிதான் 5 முறை தொடர் தோல்விக்குப் பின்னும் விஸ்வரூபம் எடுத்த வரலாறு மும்பை இந்தியன்ஸுக்கு உண்டு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x