Last Updated : 08 Apr, 2021 02:46 PM

 

Published : 08 Apr 2021 02:46 PM
Last Updated : 08 Apr 2021 02:46 PM

என் தந்தை இறந்தபோது எனக்கு ஆறுதல் கூற ஒருவராலும் வர முடியவில்லை: மனம் திறந்த முகமது சிராஜ்

ஆர்சிபி வீரர் முகமது சிராஜ் : கோப்புப்படம்

சென்னை

ஆஸ்திரேலியப் பயணத்தில் நான் இருந்தபோது என் தந்தை இறந்த செய்தி கேட்டு எனக்கு யாருமே ஆறுதல் கூட வரமுடியாத நிலையில்தான் இருந்தார்கள் என்று ஆர்சிபிஅணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

14-வது ஐபிஎல் டி20 தொடர் நாளை தொடங்க உள்ளது. சென்னையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து களமிறங்குகிறது நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணி.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், கடந்த ஆண்டு தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக அவரின் பந்துவீச்சுதான் அவரை யார் என்பதை வெளி உலகிறக்கு அடையாளப்படுத்தியது, அவருக்கும் பெரும் நம்பிக்கை அளித்தது. கடந்த தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியில் முகமது சிராஜ் இடம் பெற்றார்.

இந்நிலையில் ஐபிஎல் டி20 தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் ஆர்சிபி அணியின் இணையதளத்துக்கு முகமது சிராஜ் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நான் இந்தியஅணியில் டெஸ்ட் போட்டி மட்டுமல்ல, டி20, ஒருநாள் ஆகிய 3 பிரிவுகளிலும் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். மூத்த வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா போன்று பந்துவீசி,விக்கெட்டுகளை வீழ்த்த விரும்புகிறேன்.
நான் பந்துவீசும் போது, பும்ரா எனக்குப் பக்கத்தில் நிற்பார். லைன் லென்திதல் பந்துவீசு, பெரிதாக ஏதும் முயற்சிக்காதே என அறிவுரை கூறுவார். 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய இசாந்த் சர்மாவுடன் நான் விளையாடி அவருடன் ஓய்வறையை பகிர்ந்துள்ளேன்.

என்னுடைய கனவு என்பது இந்தியாவுக்காக அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக மாற வேண்டும். எனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கடுமையாக உழைப்பேன்.

கடந்த ஆண்டு நான் ஆர்சிபி அணியில் இணைந்த போது என்னுடைய நம்பிக்கை குறைந்த அளவில்தான் இருந்தது. ஆனால், முதல் விக்கெட் எடுத்தபின் நம்பிக்கை அதிகரித்தது. ஆனால், கொல்கத்தா அணிக்கு எதிராக நான் விக்கெட் வீழ்த்தியபின் எனக்குள் நம்பிக்கை தீவிரமாக அதிகரித்தது.

என்னுடைய ஆவேசமான பந்துவீச்சு தொடர வேண்டும் என அணியின் பந்துவீச்சாளர் சஞ்சய் பங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஆஸ்திரேலியத் தொடர் இனிமையாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பாக அமைந்தது. நான் தனிமைப்படுத்திக்கொண்ட காலத்தில் என்னுடைய தந்தை உயிரிழந்துவிட்டார். ஆனால், என் தந்தை உயிரிழந்த செய்தியைக் கூறுவதற்கு கூட யாரும் என் அறைக்கு வரமுடியவில்லை. ஆறுதல் கூறவும் முடியவில்லை. அனைவரும் தனிமைப்படுத்தும் காலத்தில் இருந்தோம்.

தனிமைக்காலம் முடிந்து பயிற்சிக்கு வந்தபோதுதான் அனைவரும் எனக்கு ஆறுதல் தெரிவித்தனர். என்னுடைய மனைவி, தாயார் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தார்கள். என்னுடைய தந்தையின் கனவு என்பது இந்திய அணிக்காக விளையாட வேண்டும், அதை அவர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். என் தந்தையின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்.
இவ்வாறு சிராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x