Last Updated : 07 Apr, 2021 11:59 AM

 

Published : 07 Apr 2021 11:59 AM
Last Updated : 07 Apr 2021 11:59 AM

ஐபிஎல் தொடரை மிரட்டும் கரோனா: ஆர்சிபி அணியில் 2-வது வீரருக்கு கரோனா தொற்று: மொத்தம் 4 ஆக அதிகரிப்பு

கோப்புப்படம்

சென்னை

ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி வீரரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் சாம்ஸுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்சிபி அணியில் 2-வது வீரர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாட்டு மக்களை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பரவல் ஐபிஎல் டி20 தொடரையும் விட்டுவைக்கவில்லை. வீரர்கள் கடுமையான பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தபோதிலும், அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு 4-வது வீரர் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி அணியில் ஏற்கெனவே தேவ்தத் படிக்கல் கரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸும் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 4-வது வீரர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே டெல்லி கேபிடல்ஸ் வீரர் அக்ஸர் படேல், ஆர்சிபி வீரர் படிக்கல், கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் ராணா மட்டும் குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

​​​​டேனியல் சாம்ஸ்

இதுகுறித்து ஆர்சிபி அணி வெளியிட்ட அறிக்கையில், “ ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸ் கடந்த 3-ம் தேதி வந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 2-வது பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டேனியல்ஸ் சாம்ஸ் தற்போது எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், நலமாக இருக்கிறார், தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். ஆர்சிபி அணியின் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சாம்ஸுடன் தொடர்பில் உள்ளனர், அவரின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். பிசிசிஐ அமைப்பின் அனைத்துவிதமன கரோனா தடுப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும்” எனத் தெரிவி்க்கப்பட்டது.

வரும் 9-ம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது ஆர்சிபி அணி. தேவ்தத் படிக்கல் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதால், முதல் 3 ஆட்டங்களுக்கு படிக்கல் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, தற்போது டேனியல் சாம்ஸும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவராலும் அடுத்த 10 நாட்களுக்கு எந்த போட்டியிலும் பங்கேற்க முடியாது.

இதற்கிடையே மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பிங் ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான கிரண் மோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மற்ற வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அனைவருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x