Last Updated : 31 Mar, 2021 08:20 AM

 

Published : 31 Mar 2021 08:20 AM
Last Updated : 31 Mar 2021 08:20 AM

எதிர்பார்த்தது நடந்தது: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு

ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வழக்கமான கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோள்பட்டை காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளதையடுத்து, புதிய கேப்டனை அணி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த ஸ்ரேயாஸ் அய்யருக்கு காயம் ஏற்பட்டு தோள்பட்டை எலும்பு விலகியது. இதையடுத்து, இந்த ஐபிஎல் தொடர்முழுவதும் ஸ்ேரயாஸ் அய்யர் விளையாடமாட்டார் என்று அறிவி்க்கப்பட்டது. இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்தது.

கேப்டன்ஷிப் பணியில் இருந்தவர்கள் மட்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் 3 அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள். பஞ்சாப் அணியை வழிநடத்திய ரவிச்சந்திரஅஸ்வின், ராஜஸ்தான் அணியை வழிநடத்திய ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இருப்பதால், இவர்களில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.

அதேசமயம், அணியின் துணைக் கேப்டன் ரிஷப்பந்த் கேப்டனாக நியமிக்கப்படவும் வாய்ப்பு இருந்தது. 23 வயதாகும் இளம்வீரர் ரிஷப் பந்த் அணியில் மூத்த வீரர்களை எவ்வாறு கையாளப்போகிறார், அழுத்தமான சூழல்களை எவ்வாறு கையாள்வார், முடிவுகளைச் சரியாக எடுப்பாரா என்ற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், வரும் ஐபிஎல் தொடருக்கு அணியின் கேப்டனாக ரிஷப் பந்த்தை நேற்று இரவு அறிவித்துள்ளது.

டெல்லி மாநில அணிக்கு மட்டுமே கேப்டனாக பணியாற்றிய அனுபவமுள்ள ரிஷப்பந்த், எவ்வாறு மிகப்பெரிய ஜாம்பவான்களை வழிநடத்தப் போகிறார் என்பது தெரியவில்லை.

கடந்த 2016ம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்குள் சென்றபின் ரிஷப்பந்த் முதல்முறையாக கேப்டன் பணியை பந்த் ஏற்கிறார். 2018ம் ஆண்டு நடந்த மெகா ஐபிஎல் ஏலத்திலும் டெல்லி அணி ரிஷப்பந்த்தை தக்கவைத்துக்கொண்டது.

ஐபிஎல் தொடரில் ஓர் அணிக்கு தலைமை ஏற்கும் 5-வது இளம் வயது கேப்டன் எனும் பெருமையை ரிஷப்பந்த் பெறுகிறார். இதற்கு முன் விராட் கோலி , ஸ்மித் தங்களின் 22 வயதில் கேப்டன் பதவியை ஏற்றனர், ரெய்னா, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பந்த் தங்களின் 23 வயதில் கேப்டன் பதவியை ஏற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரானடெஸ்ட் தொடர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர், டி20 தொடரில் ரிஷப்பந்த் சிறப்பாக விளையாடியதையடுத்து, இந்திய அணியின் நம்பிக்கையைப் பெற்றார். அதற்கு ஏற்றார்போல் ஸ்ரேயாஸ் அய்யரும் காயத்தால் அவதிப்படவே கேப்டன் பதவி ரிஷப்பந்த்துக்கு தேடி வந்துள்ளது.

இதுகுறித்து ரிஷப்பந்த் கூறுகையில் “ டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை பணிவுடன் ஏற்கிறேன். கேபிடல்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கும்போது, அணியை வழிநடத்த வேண்டும் என்பது கனவாக இருந்தது, அதை நிறைவேற்றியுள்ளேன்.

டெல்லியில்தான் நான் படித்தேன், வளர்ந்தேன். என்னுடைய ஐபிஎல் பயணம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அணியை வழிநடத்த வேண்டும் என்ற என்னுடைய கனவு நினவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.

ரிஷப் பந்த் குறித்து ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் “நான் இல்லாத நிலையில் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கும் ரிஷப்பந்த் சிறந்த பேட்ஸ்மேன். இந்தப் பதவிக்கு ரிஷப்பந்த் பொருத்தமானவர் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை” எனத் தெரிவி்த்தார்.

கடந்த 2016 ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.90 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப்பந்த் 2018ம் ஆண்டு ஏலத்தில் தக்கவைக்கப்பட்டபோது, ரூ.15 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். 2022ம் ஆண்டு நடக்கும் மெகா ஏலத்தின்போது, டெல்லி கேபிடல்ஸ் அணி தக்கவைக்கும் வீரர்களில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அடுத்தார்போல், ரிஷப் பந்த் இருக்கிறார்.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் பேட்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ரிஷப் பந்த் ஷாட் தேர்வுகள் மோசமாக இருந்தன என்று குற்றம்சாட்டப்பட்டது, இதனால் 14இன்னிங்ஸ்களில் 342 ரன்கள்மட்டுமே ரிஷப் பந்த் சேர்த்திருந்தார், இதில் ஒரு அரைசதம் மட்டுமே அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x