Last Updated : 27 Mar, 2021 02:20 PM

 

Published : 27 Mar 2021 02:20 PM
Last Updated : 27 Mar 2021 02:20 PM

என்னைப் பற்றி பேசுவதற்கு முன் என்னிடம் போன் செய்து பேசினாரா?- சுனில் கவாஸ்கர் கருத்துக்கு ஜானி பேர்ஸ்டோ பதிலடி

ஜானி பேர்ஸ்டோ, சுனில் கவாஸ்கர்: படம் உதவி | ட்விட்டர்.

புனே

சுனில் கவாஸ்கர் என்னைப் பற்றி கருத்துக் கூறும் முன் என்னிடம் போன் செய்து, நான் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு விருப்பமாக இருக்கிறேனா இல்லையா எனக் கேட்டிருக்கலாம் என்று இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோ பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஜானி பேர்ஸ்டோ மோசமாக விளையாடினார். குறிப்பாக அவர் விளையாடிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 டக் அவுட்கள், 28 ரன்கள் மட்டுமே பேர்ஸ்டோ சேர்த்தார். மிகத் திறமையான பேட்ஸ்மேனான பேர்ஸ்டோ டெஸ்ட் போட்டியில் மோசான ஃபார்மை வெளிப்படுத்தியது அனைவருக்குமே வியப்பாக இருந்தது.

அதிலும் 4-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் அஸ்வின் பந்துவீச்சில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், தொலைக்காட்சி வர்ணனையின்போது, "பேர்ஸ்டோ ஆட்டத்தைப் பார்க்கும்போது, அவருக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடவே விருப்பம் இல்லாதவர் போலவே இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கடந்த இரு போட்டிகளிலும் பேர்ஸ்டோ பட்டையைக் கிளப்பி வருகிறார். முதல் ஆட்டத்தில் 90 ரன்களுக்கு மேல் குவித்து சதத்தைத் தவறவிட்ட பேர்ஸ்டோ நேற்றைய ஆட்டத்தில் அற்புதமாகச் சதம் அடித்து 112 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகவும் பேர்ஸ்டோவின் ஆட்டம் அமைந்திருந்தது.

போட்டியின் வெற்றிக்குப் பின், பேர்ஸ்டோ பேட்டி அளித்தபோது அவரிடம், சமீபத்தில் சுனில் கவாஸ்கர் கூறியது குறித்து நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு பேர்ஸ்டோ அளித்த பதிலில் கூறியதாவது:

''முதலில் கவாஸ்கர் என்ன பேசினார் என்பது குறித்து எனக்குத் தெரியாது. இரண்டாவதாக, எனக்கும், கவாஸ்கருக்கும் இடையே எந்தவிதமான தொடர்பும், கடிதப் பரிமாற்றமும் இல்லாத நிலையில் எவ்வாறு அவர் என்னைப் பற்றிப் பேச முடியும் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். என்னைப் பற்றி அவர் பேசும் முன் என்னிடம் போன் செய்து பேசிவிட்டுக் கூறியிருக்கலாம்.

எனக்கு அவர் மோதிரத்தை அளித்தால் நான் அவரை வரவேற்பேன். அவரிடம் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய விருப்பம் குறித்தும், எவ்வாறு விளையாட விருப்பமாக இருக்கிறேன் என்பதைப் பற்றியும் பேசுவேன். டெஸ்ட் கிரிக்கெட்டை நான் எவ்வாறு ரசித்து விளையாடுவேன் என்பதைப் பற்றிப் பேசுவேன்.

நான் முன்பே கூறியதுபோல், என்னுடைய செல்போன் எப்போதுமே ஆன் செய்துதான் வைத்துள்ளேன். கவாஸ்கர் ஃப்ரீயா இருந்தால், எப்போது வேண்டுமானாலும் என்னுடன் பேசியிருக்கலாம். எனக்கு மெசேஜ் செய்திருக்கலாம்''.

இவ்வாறு பேர்ஸ்டோ தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x