Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM
இந்திய கால்பந்து அணியின் இளம் நட்சத்திரமாக உருவாகி வருகிறார் லாலெங்மாவியா. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சமீபத்தில் நடந்த ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மிகச் சிறப்பாக ஆடி கால்பந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால்நகரில், இறைச்சிக் கடை வைத்திருப் பவரின் மகனாக 2000-ம் ஆண்டில் லாலெங்மாவியா பிறந்தார். 6 வயது முதல் கால்பந்து போட்டிகளில் ஆடத் தொடங்கிய இவர், தான் படித்த பள்ளிக்காக உள்ளூரில் நடந்த சுபர்தோ கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆடினார். இதைத்தொடர்ந்து மிசோரம் மாநில சிறுவர்கள் அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்ற லாலெங்மாவியா, கடந்த இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் (20 வயது) கேப்டனாக நியமிக்கப்பட்டவர் என்ற பெருமையை பெற்றார்.
இத்தாலியின் பிரபல கால்பந்து வீரரான மரியோ பலோடெலியின் ரசிகரான லாலெங்மாவியா, அவர் அணியும் 45-ம் எண் ஜெர்சியை, தனது ஜெர்ஸியின் எண்ணாக வைத்துள்ளார். இதுபற்றி கூறும் அவர், “என் மானசீக குரு என்பதால் பலோடெலி அணியும் 45-ம் எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்து ஆடுகிறேன். அது எனக்கு உத்வேகத்தை அளிக்கிறது” என்றார்.
தனது துடிப்பான ஆட்டத்தாலும், நார்த் ஈஸ்ட் யுனிடெட் அணியை திறம்பட வழிநடத்திய விதத்தாலும், 2020-21 ஐஎஸ்எல் தொடரின் ’சிறந்த வளர்ந்துவரும் வீரர்’ என்ற பட்டத்தைப் பெற்றார். அத்துடன் அடுத்த கால்பந்து தொடர்களுக்கான இந்தியாவின் உத்தேச அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT