Published : 24 Mar 2021 07:50 PM
Last Updated : 24 Mar 2021 07:50 PM

ஒருநாள் தொடரிலிருந்து ஸ்ரேயாஸ் அய்யர் திடீர் விலகல்?; ஐபிஎல் தொடரில் விளையாடுவதும் சந்தேகம்?

தோள் பட்டையில் காயம் அடைந்த நிலையில் வெளியேறிய ஸ்ரேயாஸ் அய்யர்: படம் உதவி | ட்விட்டர்.

புனே

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் விலகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, ஐபிஎல் டி20 தொடரிலும் முதல் பாதியில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின்போது, ஸ்ரேயாஸ் அய்யர் ஃபீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன்பின் வலிதாங்க முடியாமல் ஸ்ரேயாஸ் அய்யர் துடித்தார். இதனால் ஆட்டத்தின் பாதியிலேயே ஸ்ரேயாஸ் அய்யர் வெளியேறினார். மீண்டும் ஃபீல்டிங் செய்ய ஸ்ரேயாஸ் வந்தபோதிலும் தொடர்ந்து தோள்பட்டையில் வலி ஏற்படவே, பாதியிலேயே வெளியேறினார்.

இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், "இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யரின் தோள் பட்டையில் எலும்பு லேசாக விலகியுள்ளது. அவரின் காயம் குறித்து ஸ்கேன் செய்து பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். ஆதலால், அடுத்துவரும் போட்டிகளில் விளையாட முடியாது" எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஏற்பட்டுள்ள தோள்பட்டைக் காயம் குணமடைவதற்கு சில வாரங்கள் தேவைப்படலாம் என்பதால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், ஐபிஎல் தொடரில் பாதிக்கு மேற்பட்ட போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகம் என மருத்துவக் குழுவினர் தெரிவிக்கின்றனர். ஆனால், ஸ்ரேயாஸ் அய்யர் விலகல் குறித்து பிசிசிஐ இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

ஸ்ரேயாஸ் அய்யர் இல்லாத நிலையில் அடுத்த இரு ஒருநாள் போட்டிகளில் அவருக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ், ஷூப்மான் கில் இருவரில் ஒருவர் களமிறங்குவார் எனத் தெரிகிறது.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யர் முதல் பாதிப் போட்டிகளில் விளையாடவில்லை என்றால், துணை கேப்டனாக இருக்கும் ரிஷப் பந்த் கேப்டனாக நியமிக்கப்படலாம் அல்லது ரஹானே நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

லண்டனில் லான்கேஷையர் அணிக்கு கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாட ஸ்ரேயாஸ் அய்யர் ஒப்பந்தம் செய்திருந்தார். ஜூலை 15-ம் தேதி முதல் லான்கேஷையர் அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாட இருந்த நிலையில், இந்தக் காயம் அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

இதேபோல இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன், ஆல்ரவுண்டர் சாம்பில்லிங்ஸ் இருவருக்கும் முதல் ஒருநாள் போட்டியின்போது காயம் ஏற்பட்டது. மோர்கன் ஃபீல்டிங் செய்தபோது, அவரின் ஆள்காட்டி விரலில் பந்து பட்டுக் காயம் ஏற்பட்டது. கையில் தையல் போட்ட நிலையில் பேட்டிங் செய்தார். அவரின் காயம் தீவிரமடைந்துள்ளதால், 2-வது ஒருநாள் ஆட்டத்தில் மோர்கன் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.

அதேபோல, பில்லிங்ஸ் ஃபீல்டிங் செய்தபோது, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், அவரும் 2-வது போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x