Last Updated : 21 Mar, 2021 12:17 PM

 

Published : 21 Mar 2021 12:17 PM
Last Updated : 21 Mar 2021 12:17 PM

ஒருநாள் தொடரிலும் இல்லை? ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடுவது சந்தேகம்

ஜோஃப்ரா ஆர்ச்சர் : கோப்புப்படம்

அகமதாபாத்

ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவுக்கு எதிராக வரும் 23-ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆர்ச்சர் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது

ஜோஃப்ரா ஆர்ச்சரின் முழங்கையில் ஏற்பட்டுள்ள காயத்தால் அடுத்த இரு நாட்களில் இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் செல்வார் என்பதால், ஐபிஎல் தொடரில் குறைந்தபட்சம் முதல் பாதியில் ஆர்ச்சர் ராஜஸ்தான் அணியில் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

2018-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.7.2 கோடிக்கு ஆர்ச்சரை ராஜஸ்தான் அணி நிர்வாகம் எடுத்தது. தனக்குக் கொடுக்கப்பட்ட ரூ.7.2 கோடி தகுதியானதுதான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஐபிஎல் தொடரில் ஆர்ச்சரின் பந்துவீச்சு அமைந்திருந்தது.

கடந்த 3 தொடர்களிலும் ஆர்ச்சர் தனது பந்துவீச்சால் எதிரணியை மிரளவைத்தார். அதிலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசி எதிரணி பேட்ஸ்மேன்களைத் தெறிக்கவிட்டார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக வந்திருந்த நிலையில் ஆர்ச்சரின் முழங்கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால், 2-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. டி20 தொடரிலும் பங்கேற்கமாட்டார் எனக் கூறப்பட்ட நிலையில், ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் விளையாடினார்.

ஆனால், ஆர்ச்சரின் முழங்கையில் ஏற்பட்ட காயம் தீவிரமாவதால், அவரை சிகிச்சைக்காக இங்கிலாந்துக்கு அடுத்து சில நாட்களில் அணி நிர்வாகம் அனுப்பிவைக்க உள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில், “ஆர்ச்சரை இங்கிலாந்துக்கு அனுப்புவது குறித்து மருத்துவக் குழுவினர்தான் முடிவு செய்வார்கள். நீண்ட காலத்தை மனதில் வைத்துதான் அணி நிர்வாகம் முடிவு எடுக்கும். ஆர்ச்சருக்கு ஏற்பட்ட காயம் மோசமடைந்து வருகிறது.

நாளை அல்லது இன்று இரவு ஆர்ச்சர் இங்கிலாந்து அனுப்பி வைக்கப்படுகிறாரா என்பது தெரிந்துவிடும். அவருக்கு ஏற்பட்ட காயத்துக்கு குறித்த நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். ஒரு பந்துவீச்சாளர் வலியைப் பொறுத்துக்கொண்டு பந்துவீசுவது அரிது என நான் நினைக்கிறேன். அந்த வகையில் ஆர்ச்சரின் காயம் தீவிரமானது. அவசியம் மருத்துவ சிகிச்சை தேவை” எனத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்கும் நிலையில் இதுவரை இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியலை அறிவிக்கவில்லை. ஆர்ச்சருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, ஒருநாள் தொடரில் ஆர்ச்சர் இடம் பெறமாட்டார் எனத் தெரிகிறது. டி20 தொடரில் பங்கேற்ற அணியே பெரும்பாலும் அறிவிக்கப்படும். கூடுதலாக ஜேக்பால், மார்க் பார்க்கின்ஸன் மட்டும் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஆர்ச்சர் சிகிச்சைக்காக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றால் ஐபிஎல் தொடரில் முதல் பாதிவரை ராஜஸ்தான் அணியில் அவரால் இணைந்து விளையாட முடியாத சூழல் ஏற்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பதிலைக் கேட்டபின் ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாத நிலையில் ராஜஸ்தான் அணியில் கிறிஸ் மோரிஸ், பென் ஸ்டோக்ஸ், முஸ்தபிசுர் ரஹ்மான், ஆன்ட்ரூ டை ஆகியோர் வேகப்பந்துவீச்சுக்கு இருக்கின்றனர். இதில் கிறிஸ் மோரிஸ் கடந்த மாதம் நடந்த ஏலத்தில் ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x