Last Updated : 21 Mar, 2021 03:14 AM

 

Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM

விளையாட்டாய் சில கதைகள்: கிரிக்கெட்டுக்கு உதவிய பரதநாட்டியம்

சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 2-வது வீராங்கனை, ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என 2 சாதனைகளை சமீபத்தில் படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான மிதாலி ராஜ்.

சிறுவயதில் மிதாலி ராஜுக்கு பிடித்த விஷயங்களாக தூக்கமும் பரதநாட்டியமும் இருந்தன. 2-ம் வகுப்பில் படிக்கும்போதே பரதநாட்டிய வகுப்பில் சேர்ந்த மிதாலி ராஜ், கிரிக்கெட்டில் ஈடுபட காரணம் அவரது தூக்கம்தான். தினமும் காலையில் தாமதமாக எழும் மிதாலி ராஜை சுறுசுறுப்பாக்க அவரது அண்ணனுடன் கிரிக்கெட் பயிற்சி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அண்ணனுடன் அதிகாலையில் பைக்கில் செல்லும்போதே, அவர் தூங்கி வழிவாராம்.

இதைக் கவனித்த கிரிக்கெட் பயிற்சியாளரான ஜோதி பிரசாத், ஒரு நாள் மிதாலி ராஜை சுறுசுறுப்பாக்க, ஒரு பந்தைக் கொடுத்து எறியச் சொல்லியுள்ளார். அப்போது அவர் பந்தை எறிந்த விதம் ஒரு கிரிக்கெட் வீரரின் தரத்துக்கு இணையாக இருந்ததால் அவருக்கு பேட்டிங்கில் பயிற்சி கொடுத்துள்ளார்.

சில நாட்களிலேயே மிதாலி ராஜ் பேட்டிங் கற்க, பரதநாட்டியத்தை விட்டு கிரிக்கெட்டை தேர்ந்தெடுக்குமாறு கூறியுள்ளார் பயிற்சியாளர். இந்தியாவில் பெண்களுக்கான கிரிக்கெட் அவ்வளவாக புகழ்பெறாமல் இருந்த காலம் அது. இருப்பினும் பயிற்சியாளரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, பரதத்தை கைவிட்டு கிரிக்கெட்டில் தீவிரமாக இறங்கியுள்ளார் மிதாலி. அன்று அவர் எடுத்த முடிவுதான் இன்று உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக அவரை உயர்த்தியுள்ளது.

“கிரிக்கெட்டுக்காக பரதநாட்டியத்தை விட்டது வருத்தமாக இல்லையா” என்று செய்தியாளர்கள் ஒருமுறை அவரைக் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த மிதாலி ராஜ், “நான் பரதநாட்டியத்தை விட்டாலும் அது என்னை விடவில்லை. பரதநாட்டியத்தில் நான் கற்ற சில உடல்மொழிகள், பேட்டிங்கில் சில ஷாட்களை ஆட எனக்கு உதவியாக அமைந்தன” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x