Last Updated : 20 Mar, 2021 02:16 PM

 

Published : 20 Mar 2021 02:16 PM
Last Updated : 20 Mar 2021 02:16 PM

எங்கள் மந்திரம் இதுதான்; பல அணிகள் அலறப் போகின்றன: இங்கிலாந்து துணைப் பயிற்சியாளர் காலிங்வுட் பெருமிதம்

இங்கிலாந்து அணி : படம் உதவி | ட்விட்டர்.

அகமதாபாத்

இங்கிலாந்து அணி தற்போது இருக்கும் ஃபார்மைப் பார்த்து டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பல அணிகள் அலறப்போகின்றன என்று அந்த அணியின் துணைப் பயிற்சியாளர் பால் காலிங்வுட் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

டி20 தரவரிசைப் பட்டியலில் தற்போது முதலிடத்தில் இங்கிலாந்து அணி இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் கடும் சவால் அளித்த இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றியும், தோல்வியும் அடைந்துள்ளது. தற்போது டி20 தொடர் 2-2 என்ற சமநிலையில் இருக்கிறது. வெற்றியாளரை முடிவு செய்யும் இறுதிப் போட்டி இன்று இரவு நடக்கிறது.

இதற்கிடையே இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளர் பால் காலிங்வுட் பிரிட்டன் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். காலிங்வுட் தலைமையில் 2010்-ம் ஆண்டு இங்கிலாந்து, டி20 உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

காலிங்வுட் பேட்டியில் கூறியதாவது:

''இங்கிலாந்து அணி கடந்த 4 ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டி20 பிரிவில் இருக்கும் ஃபார்மைப் பார்த்து பல அணிகள் அலறுகின்றன. இங்கிலாந்து அணியில் பல மேட்ச் வின்னர் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் இருப்பதால், உலகக் கோப்பைப் போட்டிக்கு மிகவும் உதவியாக இருக்கும். நிச்சயமாக வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டி பல அணிகளுக்கு இங்கிலாந்து அணியின் ஃபார்ம் பெரும் அச்சத்தைக் கொடுக்கும், அலறவைக்கும் என நான் நினைக்கிறேன்.

2010-ம் ஆண்டு நாங்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தயாரானதைவிட, தற்போது மிகவும் சிறப்பாகத் தயாராகி இருக்கிறோம் என நினைக்கிறேன். 2010-ம் ஆண்டு கடைசி நேரத்தில் அணி ஒன்று சேர்ந்தது. சில கடினமான முடிவுகளை வீரர்கள் தேர்வில் எடுத்தோம்.

என்ன மாதிரியான கிரிக்கெட்டை நாங்கள் விளையாடப் போகிறோம் என எங்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அதை நீண்டகாலத்துக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. இப்போது இருக்கும் அணி அனைத்தையும் ஆய்வு செய்து தயாராகி இருக்கிறது.

ஒருநாள் மற்றும் டி20 போட்டியின் வெற்றி என்பதே பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்தான் இருக்கிறது. உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்று எங்களால் இனிமேல் ஒருபோதும் வருந்தமாட்டோம். பெரிய தொடர்கள் எல்லாம் சிலருக்கு மட்டுமேதான் என்ற எண்ணம் இருக்காது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த அணியை மிகவும் ஆழமாக நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். மிகவும் ஆவேசமாகத் தயாராக வைத்திருக்கிறோம்.

மிகப்பெரிய அணிகளுடன் மோதும் போதும், தொடர்களில் விளையாடும்போதும் அதிகமான துணிச்சல், மனவலிமை தேவை. உதாரணமாக இந்திய அணிக்கு எதிராக 5-வது டி20 போட்டியில் விளையாடும்போது அதிகமான மனவலிமையும், துணிச்சலும் இங்கிலாந்து வீரர்களுக்குத் தேவை.

களத்தில் நுழைந்துவிட்டால், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சூழலுக்குத் தங்களை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும்.

எங்கள் மந்திரத்தில் தெளிவாக இருக்கிறோம். என்னவென்றால் முதல் போட்டியோ அல்லது இறுதிப் போட்டியோ எப்படி விளையாடப் போகிறோம், எதிரணிக்கு எப்படி அழுத்தம் கொடுக்கப் போகிறோம் என்பதுதான் எங்கள் மந்திரம்''.

இவ்வாறு காலிங்வுட் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x