Published : 14 Mar 2021 02:38 PM
Last Updated : 14 Mar 2021 02:38 PM

ரோஹித் சர்மாவை பெஞ்சில் அமரவைக்கும் கோலிக்கு மட்டும் அந்த விதி பொருந்தாதா? சேவாக் காட்டம்

விராட் கோலி, சேவாக் : கோப்புப்படம்

மும்பை


ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களையும் பெஞ்சில் அமரவைத்து ஓய்வு அளிக்கும் கோலிக்கும் அந்த விதி பொருந்துமா என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. போட்டிக்கு முந்தைய நாள் அளித்த பேட்டியில் பேசிய கேப்டன் கோலி, அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ராகுல் களமிறங்குவார்கள் எனத் தெரிவித்துவிட்டு திடீரென ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

அருமையான ஃபார்மில் இருக்கும் ரோஹித் சர்மாவை திடீரென பெஞ்சில் அமரவைத்து ஓய்வு அளிக்கப்பட்டது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் தொடக்க வீரர்கள் ஷிகர் தவண், ராகுல், கோலி என மூவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் கோலி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளித்ததை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், அஜெய் ஜடேஜா ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கிரிக்பஸ் தளத்துக்கு அளித்த பேட்டியில் ஜடேஜா பேசுகையில் " ஒரு பேட்ஸ்மேன் நல்ல ஃபார்மில் இருக்கும் போது யாரும் அவருக்கு ஓய்வு அளிக்கமாட்டார்கள். நீங்கள் நல்ல ஃபார்மில் இருந்தால், தொடர்ந்து விளையாடத்தான் விரும்புவீர்கள். இதைத்தான் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் செய்தது. முக்கியமான வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளித்தது" எனத் தெரிவித்தார்.

அப்போது வீரேந்திர சேவாக் பேசுகையில் " ரோஹித் சர்மாவுக்கு முதல் இரு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படும் எனக் கோலி கூறியுள்ளார். ஆனால், அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும் இந்த விதி கேப்டன் கோலிக்கு ஏன் பொருந்தவில்லை. கேப்டன் கோலிக்கும் இரு போட்டிகளில் ஓய்வு கொடுக்க வேண்டும்.

ஓய்வு கொடுங்கள், நான் அடுத்த 3 போட்டிகளுக்கு ஓய்வு எடுக்கிறேன் என்று கோலி தாமாக முன்வந்து கூறுவார் என்று நான் நினைக்கவில்லை. தாமாக முன்வந்து , தான் ஓய்வு எடுக்கிறேன் என கோலி கூறியதாக எனக்கு நினைவில்லை. ஒரு கேப்டன் ஓய்வு எடுக்கவிருப்பமில்லாதபோது, மற்றவர்களுக்கு எவ்வாறு அவர் ஓய்வு அளிப்பார். இது வீரர்களைச் சார்ந்தது.

டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா நல்ல ஃபார்மில் இருந்தார், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டார். ரோஹித் சர்மா 4 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டிருந்தால், டி20 போட்டிக்கு முறைக்கு திரும்ப அவர் ஃபார்முக்கு மாற அவர் காத்திருக்க வேண்டியது இருந்திருக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொருத்தவரை உங்களை வெளிப்படுத்தச் சுதந்திரம் கிடைக்காது. ஆனால், டி20, ஒருநாள் போட்டிகளில் உங்களின் ஆட்டத்திறமையைச் சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். பவுண்டரி, சிக்ஸர்களை விளாசலாம். தன்னையும் மகிழ்வித்து, ரசிகர்களையும் மகிழ்விக்கலாம்.

ஆதலால், ரோஹித் சர்மா அணிக்குள் வரும்போது, கோலி ஓய்வு எடுத்துச் செல்வதுதான் சிறந்தது. ரோஹித் சர்மா அணிக்குள் வரும்போது, கோலி ஓய்வு பெறுவாரா என்பதுதான் தற்போது கேள்வி. ரோஹித் சர்மா, இசாந்த் சர்மா, ஷமி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கும் கோலி, தனக்கு எப்போது ஓய்வு அளிப்பார்"
இவ்வாறு சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x