Last Updated : 12 Mar, 2021 09:35 AM

 

Published : 12 Mar 2021 09:35 AM
Last Updated : 12 Mar 2021 09:35 AM

இன்று டி20 போட்டி: ரோஹித்துடன் களமிறங்குவது ராகுலா அல்லது தவணா? கோலியின் தேர்வு என்ன?

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, ஷிகர் தவண் : கோப்புப்படம்

அகமதாபாத்

அகமதாபாத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில், ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு ஷிகர் தவணுக்கு வழங்கப்படுமா அல்லது, கேஎல் ராகுலுக்கு வழங்கப்படுமா என்பது குறித்து கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரின் 5 ஆட்டங்களும் இந்த மைதானத்தில்தான் நடக்கின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின்போது, ரோஹித் சர்மா அணியில் இல்லாததால், ஷிகர் தவணுடன் இணைந்து கே.எல்.ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினார்.

ஆனால், தற்போது இந்திய அணி்க்குள் ரோஹித் சர்மா திரும்பிவிட்டார். தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்குவதில் மாற்றம் ஏதும் இல்லை. ஆனால், ரோஹித்துடன் களமிறங்கும் வாய்ப்பு ஷிகர் தவணுக்கு வழங்கப்படுமா அல்லது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, காணொலியில் நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் தொடக்க வீரர்களாக யார் களமிறங்குவார் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு கோலி பதில் அளிக்கையில், “இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து, கேஎல்.ராகுல்தான் களமிறங்குவார். ஷிகர் தவண் மூன்றாவது தொடக்க வீரராக காத்திருப்பில் வைக்கப்படுவார். ராகுலும், ரோஹித் சர்மாவும் தான் ஆட்டத்தை தொடங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

ரோஹித் சர்மா, ராகுல் இருவரில் யாருக்காவது ஏதேனும் காயம் ஏற்பட்டால், அல்லது ஓய்வு அளிக்கப்பட்டால் ஷிகர் தவண் களமிறங்குவார். ஆனால்,ஆட்டத்தைத் தொடங்குவது ராகுல், ரோஹத் சர்மாதான்” எனத் தெரிவி்த்தார்.

ஷிகர் தவண், ரோஹித் சர்மா இருவர் தொடக்க ஜோடியாக களமிறங்கியபோது இருந்த ரெக்கார்டை விட, ராகுல், ரோஹித் சர்மா சேர்ந்து களமிறங்கியபோதுதான் சிறந்த சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அதிரடியான தொடக்கமும், நல்ல ஸ்கோரும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் திவேட்டியா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு கோலி பதில் அளிக்கையில் “ இந்த முறையில் அணியில் புதிதாக பல வீரர்களைச் சேர்த்துள்ளோம். வலிமையான பேட்டிங் வரிசைக்கு சரியான வீரர்களைத் தேர்வு செய்வோம். நடுவரிசையில் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இந்த 5 போட்டிகளையும் நாம் கட்டுபாடுகளின்றி விளையாட விரும்புகிறோம். அதிரடியாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன்கள் இப்போது நமக்குத் தேவை. அதைத்தான் கண்டுபிடிக்கப்போகிறோம். ஆதலால், வீரர்கள் மிகவும் சுதந்திரமாக விளையாட அனுமதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x